Skip to main content

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற ராணுவ வீரர்; கொலையில் முடிந்த பேராசை!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

Kanyakumari issue army man who arrested

 

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்களுக்கு மத்தியில் பெண்களிடம் வழிப்பறி கொள்ளைகளும் அதிகரித்தே வருகின்றன. இந்த நிலையில், வழிப்பறி செய்ய இசைந்துகொடுக்காத பெண்ணை கொலைசெய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேக்காமண்டபம் புனத்துவிளையைச் சேர்ந்த வின்சென்ட் மனைவி மேரிஜெயா (44), முளகுமூடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டியிருந்தார். அப்போது நல்லபிள்ளை பெற்றான்குளத்தின் அருகில் மேரிஜெயா வரும்போது, அங்கு நின்று கொண்டிருந்த முளகுமூடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மெர்லின்ராஜ் (38), திடீரென மேரிஜெயாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகையைப் பறிக்க முயன்றுள்ளார்.

 

உடனே மேரிஜெயா அவரின் கையைத் தட்டிவிட்டு, கூச்சலிட்டு அவரிடமிருந்து செயினை மீட்கப் போராடினார். கூச்சல் சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்களும் ஓடிவர, அதற்குள் அவர் மேரிஜெயாவின் வாயைப் பொத்தி குளத்துக்குள் தள்ளி மூழ்கடித்துள்ளார். இதில் மூச்சுத் திணறி மேரிஜெயா உயிரிழந்தார். பின்னர், அங்குவந்த மக்கள் மெர்லின்ராஜை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

'மேரிஜெயா குளத்தில் தற்கொலை செய்யக் குதித்தபோது தான் காப்பாற்ற முயன்றதாகச் சொல்லியுள்ளார்' மெர்லின்ராஜ். ஆனால், போலீஸ் மேற்கொண்ட தீவிர விசாரணையில், உண்மையைச் சொல்லியிருக்கிறார். இதேபோல்தான், வேர்கிளம்பியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்றபோது, அந்தப் பெண் சத்தம் போட்டுள்ளார். பொதுமக்கள் சூழ்ந்ததால், கடைசியில் போலீசாரிடம் அந்தப் பெண் தன்னை தனிமையில் இருக்க அழைத்ததாகப் பொய் சொல்லியுள்ளார் மெர்லின்ராஜ். அப்போதும்,  போலீசின் தீவிர விசாரணையில் உண்மையைச் சொல்லியிருக்கிறார்.

 

மெர்லின்ராஜ் பணியிலிருந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம் இப்படி திருட்டுத் தொழிலில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார் என போலீஸ் தரப்பில் கூறினார்கள்.


 

 

சார்ந்த செய்திகள்