Skip to main content

ஜெயலலிதாவும் ஜூலியும்! - வெளிவராத சுவாரஸ்யம்!

Published on 24/02/2018 | Edited on 26/02/2018
jayalalitha pet animal

 

முரளி, கர்த்திக், பரணி, பத்மினி என்று நாய்களுக்கு  ஜெயலலிதாவே செல்லப்பெயர்கள் சூட்டி அன்போடு வளர்த்தாலும் ஜூலிதான் ஜெயலலிதாவின் மிக மிக மிக செல்லமான நாய். அவரது அறையில்தான் இருக்கும் ஜூலி. எவ்வளவு டென்ஷன்கள் கோபங்கள் இருந்தாலும் ஜூலியுடன் கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டால் குழந்தைபோல் ஆகிவிடுவார் ஜெயலலிதா. 

 

ஒருநாள், அமைச்சர் செங்கோட்டையன் ஜெயலலிதாவை பார்க்க வந்தபோது, சோஃபாவில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க  அருகில் வந்தார். தனது செல்ல அம்மாவை செங்கோட்டையன் ஏதோ தாக்கப்போகிகிறார் என்று நினைத்த ஜூலி, அதிரடி பாதுகாப்பு நடைவடிக்கைகளில் ஈடுபவடுதாக நினைத்து செங்கோட்டையனின் வேட்டியை உருவிவிட்டது. செங்கோட்டையன் பதறிப்போய் நிற்க...யார் சொல்லியும் வேட்டியை திருப்பிக்கொடுக்காத ஜூலி... ஜெயலலிதா சிரித்துக்கொண்டே ஸ்ட்ரிக்டாக அன்புக்கட்டளையிட்ட பிறகுதான் வேட்டியை திருப்பிக்கொடுத்திருக்கிறது. அந்தளவுக்கு ஜெயலலிதாவின் மீது அன்பும் பாசமும் கொண்டது ஜூலி. அடுத்தடுத்து, ஜெயலலிதாவை பார்க்க  வந்தவர்களின் கண்களில் பீதியும் மிரட்சியும் தென்பட்டிருக்கிறது, "வெளியில போனவன் விஷயத்தை சொல்லியிருப்பான் போல... கால்ல விழ வர்றவன்லாம் என்னை பார்க்கிறானுங்க... ஜூலியை பார்க்கிறானுங்க... கிட்ட வந்து காலில் விழலாமா வேண்டாமான்னு யோசிக்கிறானுங்க" என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார் ஜெயலலிதா. அதுவும், ஜூலி இருந்தா இனிமே வெள்ளை பேண்டுத்தான் போட்டுக்கிட்டு உள்ள வருவானுங்க போலிருக்கு என்றும் கமேண்ட் அடித்தும் சிரித்திருக்கிறார் ஜெயலலிதா.

 

 சசிகலாவின் நாய்தான் ஜூலி!

பொதுவாக, நாய்களுக்கு செல்லப்பெயர் சூட்டுகிறவர்கள் ஜிம்மி, ஜூலி என்றுதானே சூட்டுவார்கள்? ஆனால், ஜெயலலிதா சூட்டும் பெயர்கள் ஏற்கனவே தெரியும். அப்படியிருக்க, ஜெயலலிதாவின் செல்ல நாய்க்கு மட்டும் ஜூலி என்று எப்படி பெயர் சூட்டியிருப்பார்? என்கிற சந்தேகம் போயஸ்கார்டனிலுள்ள அத்தனை பேருக்கும் இருந்தது. ஆனால், ஒருநாள் சந்தேகம் விலகி அந்த நாய் சசிகலாவுடையது என்று கன்ஃபார்ம் ஆனது.

 

எப்படி தெரியுமா? ஒருநாள் சசிகலாவின் வைர மோதிரத்தை காணவில்லை. சசிகலா உள்ளிட்ட பணிப்பெண்கள் வீடு முழுக்க சல்லடை போடாத குறையாய் தேடிக்கொண்டிருக்க ஜூலி மட்டும் திரு திருவென்று முழித்துக்கொண்டு அமர்ந்திருந்தது. ஒருகட்டத்தில் சசிகலாவுக்கே டவுட் வந்து, ‘ஏன் ஜூலி மட்டும் திரு திருன்னு முழிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கு?’என்று  சொல்ல, பக்கத்திலிருந்தவர்களும் ஆமாம் என்று ஆமோதிக்க கெட்-அப் ஜூலி என்றார் சசிகலா. ம்ஹூம் என்பதுபோல் முறைத்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்க... சந்தேகம் இன்னும் வலுக்க ஆரம்பித்தது. ஜூலி எழுந்திரு... அதட்டியும்கூட கம் போட்டு ஒட்டியதுபோல் ஜூலி உட்கார்ந்துகொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ஜூலியை பிடித்து இழுத்தபோதுதான் வைர மோதிரத்தை எடுத்துவைத்துக்கொண்டு ஜூலி உட்கார்திருந்தது தெரிய வந்து போயஸ்கார்டனே சிரிப்பால் அதிர்ந்திருக்கிறது. வெளியில் உள்ளவர்களுக்குத்தான் சசிகலா சின்னம்மா. ஆனால், போயஸ்கார்டனிலுள்ள ஜெயலலிதாவின் விசுவாசிகள் வேறு பெயர் வைத்துதான்  சசிகலாவுக்கு தெரியாமல் அழைத்துக்கொள்வார்கள். ஒருநாள் 100 ரூபாய் நோட்டையும் திருடிவைத்திருந்ததை பார்த்து, சசிகலாவின் நாய் என்பதை நிரூபித்துவிட்டது என்று சைலண்டாக சொல்லி சிரித்திருக்கிறார்கள்.     
          
 

சார்ந்த செய்திகள்

Next Story

“டாக்டர் முடியலைன்னா விட்ருங்க...” - வைரலாகும் ஜெ-வின் ஆடியோ 

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

jayalalithaa old video goes viral

 

4 ஆண்டுகளுக்கு முன்பு ‘நக்கீரன்’ தளம் வெளியிட்ட ஜெயலலிதா திணறிப் பேசும் ஆடியோ  தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். 2016ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே போகிறது.

 

இந்நிலையில், ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளில் இருந்து நக்கீரன் தளம் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வந்தது. அதில், ஜெயலலிதாவை அடக்கம் செய்யும்போது அவரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டிருந்தது என்று நக்கீரன் தளம் அந்த செய்தியை பகிரங்கமாக அம்பலப்படுத்தியது. இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை ஆதாரத்துடன் வெளியிட்டதை அடுத்து ஜெயலலிதா சிகிச்சை குறித்த அதிர்ச்சி ஆடியோ ஒன்றை வெளியிட்டது.  

 

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பலத்த மூச்சுத்திணறலுடன் மருத்துவருடன் 1 நிமிடத்திற்கு மேலாக பேசும் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அப்போது பேசிய  ஜெயலலிதா  “ OH SAD...எதுல ரெக்கார்ட் பண்ணுறீங்க? ” என்று மருத்துவரிடம் கேட்க, அதற்கு அந்த மருத்துவர்  “ VLC  ரெக்கார்ட்ல மேடம்... அப்ளிகேஷன் டவுன்லோடு பண்றேன்” என பதிலளிக்கிறார். இதனையடுத்து  “இப்போ நான் சொல்றது கேக்குதா? அப்போ கூப்பிட்டேன்... ஆனா எடுக்க முடியலனு சொன்னீங்க” என கூறிய ஜெயலலிதா  “அய்யோ... அம்மா... நெஞ்சுல விசில் சத்தம் கேட்குது” என்று பதட்டத்துடன் பேசும் ஆடியோ கேட்போர் நெஞ்சை பதற வைத்தது.                                                                                                                                                                                           

மேலும், அவர் பேசும்போது  “எல்லாம் ஒண்னு கிடக்க ஒண்ணு பண்றீங்க... நீங்களும் சரியில்ல டாக்டர், எடுக்க  முடியலைன்னா  விடுங்க’’ என அந்த ஆடியோவில் ஜெயலலிதா பேசுகிறார். இந்த ஆடியோ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2018 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி நக்கீரன் தளத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் லீக் ஆன இந்த ஆடியோவால் தமிழகத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த ஆடியோ  அதிமுகவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Next Story

ஜெ. மரணத்தில் சிக்கும் சசிகலா; பரபரப்பை கிளம்பிய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

Sasikala involved jayalalitha Arumugasamy Commission report

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்துள்ள ஆறுமுகசாமி ஆணையத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோதே கடந்த 2016ஆம் ஆண்டு அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இருப்பினும், அவரது மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மீது சந்தேக ரேகைகள் விழுந்தது.

 

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கினாலும், ஜவ்வாக இழுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக ஆட்சி நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார்.

 

இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இதில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை எனக் கூறும் இந்த அறிக்கை, ஜெயலலிதா மயக்கமடைந்த பின்னர் அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என பகீர் கிளப்பியுள்ளது.

 

மேலும், 2012-க்குப் பிறகு ஜெயலலிதா சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகும் கூட, இருவருக்கும் இடையே சுமூகமான உறவு நிலவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது எனவும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஆணையம்., ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு இருப்பதாக அதிர்ச்சி கொடுத்துள்ளது.

 

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் இந்த விசாரணை ஆணையம் தொடங்கப்பட்டாலும் திமுக ஆட்சிக் காலத்திலும் நீடித்தது. பல முறை இந்த ஆணையம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மிகவும் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ள இந்த அதிர்ச்சிகர அறிக்கை தற்போது வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.