நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காஞ்சிபுரத்தில் நேற்று மாலை ஓ. பன்னீர்செல்வம் 'அதிமுகவை மீட்டெடுப்போம்' எனப் புரட்சி பயணம் தொடங்க இருந்தார். இந்த விழா நடைபெற இருந்த இடத்தில் கனமழை பெய்தது. விழாவிற்கு வந்திருந்தவர்கள் ஒதுங்கக் கூட இடம் இல்லாமல் தவித்து வந்தனர்.
சிறிது நேரம் மழை ஓய்ந்த பிறகு மீண்டும் தொண்டர்கள் கூடினர். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் மேடையில் பேசினர். ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேசுகையில், ''ரஞ்சித் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னால் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்த இந்த பூமியில் தெரிவிக்கிறேன். ராபின்சன் பூங்காவில் மழையில் தான் திராவிட இயக்கமே உருவானது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய புரட்சி பயணத்தை ஓபிஎஸ் துவங்கியிருக்கிறார். இந்த மழையில் தான் இந்த புரட்சி பயணம் தொடங்கி இருக்கிறது.
இந்தப் பயணம் நடக்கும் போது எடப்பாடி பழனிசாமி என்கிற துரோகி கோடநாடு கொலை வழக்கில் சிறையில் இருப்பார் என்பதையும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். மழையை பொருட்படுத்தாமல் இங்கு வந்த அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மீண்டும் சந்திப்போம்'' என்றார். இதையடுத்து மழை அதிகரித்ததால் புரட்சி பயண துவக்க விழா ஒத்திவைக்கப்படுவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.