நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த வழக்கு: 13 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத 13 மாவட்ட ஆட்சியர்களை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, இயற்கைவள முன்னேற்ற மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் சண்முக சுந்தரம் என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், ஈரோடு மாவட்டம் கதிராம்பட்டிணம் என்ற பகுதியில் உள்ள பெரும்பள்ள ஓடை மிகவும் மாசடைந்துள்ளதாகவும், இதைத் தடுத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும் வழக்கில் குறிபிட்டிருந்தார்.
மேலும், இந்த ஆக்கிரமிப்புகளால் விளைநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இயற்கை வளங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2015-ஆம் ஆண்டு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும் எனவும், கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகள் ஜி.ரமேஷ் மற்றும் டீக்கா ராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள் இதுவரை இந்த வழக்கு குறித்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? மேலும், என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளன? என்பது போன்ற கேள்விகளை எழுப்பினர். இதுகுறித்து இன்று 19 மாவாட்ட ஆட்சியர்கள் இதுதொடர்பாக அறிக்கைகளை அளித்தனர். இதில், ஆஜராகாத 13 மாவட்ட ஆட்சியர்கள் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி ஆஜராக வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.