Skip to main content

கஜா புயலால் உடமைகளை இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர்

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

கடந்த ஆண்டு நவம்பர் 16 ந் தேதி தமிழக மக்களால் மறக்க முடியாத நாள் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்துவிட்டு சென்ற கஜா புயல் தாக்கிய நாள்.

இந்த புயலில் பாதிக்கப்பட்டு விவசாயம், தொழில், உடமைகளையும் இழந்த பலரும் நடைபிணமாக வாழ்ந்து வருகிறார்கள். மரம், செடி, பயிர்களை இழந்த விவசாயிகள் மீள முடியாமல் தவிக்கிறார்கள். மீனவர்கள் கடன் மேல் கடன் வாங்கி தொழில் செய்ய முடியாமல் திணறுகிறார்கள்.
 

Inspector who rescued a mentally ill woman and handed over to her relatives

 

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள வடகாடு பரமநகர் கிராமத்தில் கீற்றுக் கொட்டகையில் வசித்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த பெண் சாவித்திரி தனது மகள்களுக்காக கணவர் நடத்திய டீ கடையை நடத்தி குழந்தைகளை வளர்த்து வந்தார். கஜா புயல் அந்த ஏழையையும் விட்டு வைக்கவில்லை. அவரது கடை என்று சொல்லக் கூடிய கொட்டகையும் குடியிருந்த கொட்டகையும் காணாமல் போனது. பிழைக்க வழியில்லை. சரிசெய்யப்படாத கொட்டகையில் இருந்து அழுதார். 

அம்மாவின் அழுகையை நிறுத்த பள்ளிப் படிப்பை முடித்த கடைசி மகள் திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். இப்படியே தனது நிலையை நினைத்து நினைத்து கலங்கிய அந்த பெண்ணின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டது. தானாக பேசத் தொடங்கினார். ஆறுதல் சொல்ல அருகில் மகளும் இல்லை. அதனால் மனநிலை பாதிக்கப்பட்ட பகலில் வீட்டில் முடங்கி கிடக்கும் சாவித்திரி இரவில் கடை பற்றிய நினைவு வந்ததும் கடை இருந்த இடத்திற்கு சென்று அதைப் பார்த்த பிறகு என்ன செய்வதென்றே தெரியால் அந்தப் பக்கம் வருவோரை எல்லாம் பேசினார்.

அக்கம் பக்கம் வீடுகளுக்கு சென்று சத்தம் போடத் தொடங்கினார். ஆனால் அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து வருந்தினார்களே தவிர அவரை யாரும் திட்டவில்லை, விரட்டவில்லை. இந்த நிலையில் தற்போது வடகாடு காவல்நிலையத்திற்கு புதிதாக வந்துள்ள காவல் ஆய்வாளர் பரத்சீனிவாசன் அந்த பெண்ணின் நிலை பற்றி அறிந்து இன்று பெண் போலிசாரின் உதவியுடன் காவல்நிலையம் அழைத்து வந்து அவருக்கு புதிய உடைகள் கொடுத்து சாப்பாடு வாங்கி கொடுத்து சமாதானமாக பேசிய பிறகு அவரது உறவினர்களை வர வைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும் விரைவில் மனநல சிகிச்சைக்கு எற்பாடுகள் செய்து சிகிச்சைகு அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். மனநல சிகிச்சை கொடுப்பதுடன் அந்த பெண்ணின் மீதமுள்ள வாழ்க்கையை கழிக்க அவருக்கு தெரிந்த டீ கடை நடத்த அரசாங்கமோ, தன்னார்வலர்களோ உதவிகள் செய்தால் மீண்டும் மனநிலை பாதிக்காமல் மீதி காலத்தையும் நல்லபடியாக கழிப்பார். மகளையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பார்.

 

 

சார்ந்த செய்திகள்