Skip to main content

போதையில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

incident in thenkasi

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரின் பரபரப்பான பேருந்து நிலையத்தில், பிழைப்பின் பொருட்டு நரிக்குறவர் சமுதாயத்தினர் ஊசி, பாசிமணி விற்று வருகின்றனர். நேற்று முன்தினம் நண்பகல் பேருந்து நிலையத்தில் மஃப்டியிலிருந்த போலீஸ்காரர் ஒருவர், பாசி விற்கும் நடுத்தர வயது நரிக்குறவப் பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் உறவினரான மாற்றுத் திறனாளியை அந்தப் போலீஸ்காரர் லத்தியால் தாக்க முயன்றிருக்கிறார்.

 

இச்சம்பத்தைக்கண்ட பயணிகள் சிலர் அவரைத் தட்டிக் கேட்டதில் அவர்களோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆவேசமான பயணிகள் அவரைச் சுற்றி வளைத்து அவரது கைகளைக் கட்டி புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரிந்து வருவதாவும், பணி முடிந்து அருகிலுள்ள தனது கிராமத்திற்குப் போக இருப்பதும் தெரியவந்திருக்கிறது. மது போதையிலிருந்த அந்த போலீஸ்காரர் மீது விஷயம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர் புறக்காவல் போலீசார்.

 

incident in thenkasi

 

அதே போலீஸ்காரர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகரின் வங்கி ஒன்றில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளாராம். அதுசமயம் வங்கியின் பாதுகாப்புப் பணியிலிருந்தவர்கள் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆரம்பத்திலேயே அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அவர் மீண்டும் தகராறில் ஈடுபடுவாரா என ஆதங்கப்படுகின்றனர் சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்