தூத்துக்குடி மாவட்டம் ராமசந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அழகு பாண்டி - கூரியம்மாள் தம்பதியினர். அழகுபாண்டி ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வரும் நிலையில். மகன் வெளியூரில் வேலைபார்த்து வருகிறார். வீட்டில் அழகு பாண்டி மற்றும் கூரியம்மாள் இருவர் மட்டும் வசித்து வந்துள்ளனர்.
இதனிடையே அழகு பாண்டிக்கும், கூரியம்மாள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அழகுபாண்டி மனைவி கூரியம்மாவை வீட்டில் கிடந்த கம்மை எடுத்து கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த சேலையை மனைவியின் கழுத்தை இறுக்கி மின்விசிறியில் தொங்கவிட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கூரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அழகுபாண்டியைத் தேடிவந்தனர். இதையடுத்து, விளாத்திகுளம் காவல்நிலையத்தில் சரணடைந்த அழகுபாண்டியைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.