Skip to main content

மனைவியை கொன்று பதற்றமில்லாமல் இருந்த கணவன்! ஆதரவற்று நிற்கும் குழந்தைகள்! 

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

Husband arrested in wife case near velankanni

 

வீட்டுக்கு வர மறுத்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்துவிட்டு, எந்தவித பயமோ, பதற்றமோ இல்லாமல் காவல்துறைக்காக காத்துக்கொண்டிருந்துள்ளார் கணவர்.

 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரும், தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியைச் சேர்ந்த இந்துமதி என்பவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த தீபாவளி முடிந்ததும் இந்துமதி வேறு ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவருடனே சென்றுள்ளார். செல்லதுரை, பிள்ளைகளின் நலன்கருதி மீண்டும் இந்துமதியை தன்னுடன் அழைத்துவந்துள்ளார்.

 

இந்தச் சூழலில் இந்துமதிக்கும், செல்லதுரைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினமும் (13.12.21) இந்துமதிக்கும் அவரது கணவர் செல்லதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால், இந்துமதி கோவப்பட்டு திருமணமான அவரது சகோதரியின் கணவர் சங்கர் என்பவரது வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். 

 

Husband arrested in wife case near velankanni

 

வேளாங்கண்ணி அருகே ஆய்மழையில் உள்ள சங்கர் வீட்டில் இந்துமதி தங்கியிருப்பதை அறிந்துகொண்ட செல்லதுரை, அன்று இரவே குடிபோதையோடு வந்து இந்துமதியிடம் தகராறு செய்துள்ளார். ஆனாலும் ஆத்திரம் குறையாத செல்லதுரை நேற்று காலை 9 மணி அளவில் இந்துமதியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுள்ளார். இதில், இந்துமதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார். கொலை செய்துவிட்டு தப்பி ஓடாமல், எந்தவித பதற்றமும் இல்லாமல் காவல்துறைக்காக அதே இடத்தில் நின்றிருக்கிறார் செல்லதுரை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி காவல்துறையினர், வழக்குப் பதிவுசெய்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

 

இருவரும் இரண்டு குழந்தைகளை ஆதரவற்றவர்களாக தவிக்கவிட்டுவிட்டு சென்றிருப்பதுதான் வேதனையின் உச்சம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்