ராஜீவ்காந்தி் கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவர் ராபர்ட் பயாஸ். இவர், தனது மகன் தமிழ்கோ திருமண ஏற்பாடுகளைச் செய்திட 30 நாட்கள் பரோல் வழங்கக்கோரி ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்தார். 40 நாட்களாக சிறைத்துறை டிஐஜிக்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பரோல் கோரிய வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ராபர்ட் பயாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ’28 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ராபர்ட் பயாஸ் முதல்முறையாக பரோல் கேட்கிறார்.
![former prime minister rajiv gandhi case robert fayaz bail](http://image.nakkheeran.in/cdn/farfuture/6GD2jhPqZPH08GtbK5dO6mMUobuVfJhbGEXvjIgjpvk/1574321305/sites/default/files/inline-images/robert_2.jpg)
அதுவும் மகனின் திருமண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதற்காக. எனவே, பரிசீலித்து உத்தரவிட வேண்டும்’என்றார். அப்போது, அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்கினார்கள் நீதிபதிகள். இந்த வழக்கில், இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.எம்.டி. டீக்காராமன் அமர்வு, ராபர்ட் பயாஸுக்கு தனது மகனின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திட 30 நாட்கள் பரோல் வழங்கினர்.