Skip to main content

விருத்தாசலம் தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. குழந்தை. தமிழரசன் காலமானார்!! 

Published on 09/07/2020 | Edited on 09/07/2020
 Former DMK MLA's kuzhanthai tamilarasan passed away

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை.தமிழரசன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று(09.07.2020) மாலை உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், எடச்சித்தூர் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல்-சின்னம்மாள் தம்பதியரின் மூத்த மகனான 29.01.1956-ல் பிறந்தவர் குழந்தை.தமிழரசன். பள்ளிப் பருவம் முதற்கொண்டு தி.மு.கழகத்தின் சார்பில் நடைபெற்ற பல போராட்டங்களில் ஈடுபட்டு, வழக்கறிஞராக பணியை தொடங்கியவர் தி.மு.க நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு தொண்டர்கள் சிறை செல்லும்போது, தொண்டர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடி விடுதலையடைய செய்தவர். தி.மு.க இளைஞரணி தொடங்கிய காலகட்டத்தில் மங்கலம்பேட்டை இளைஞரணி அமைப்பாளராக பணியாற்றினார். 1985-ஆம் ஆண்டு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை பொதுக்குழு உறுப்பினராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தி.மு.க தணிக்கை குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தி.மு.க தலைவர் கலைஞர் இவரது கட்சி பணிகளை பாராட்டி அவருக்கு  1996-ல் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்தார். 1996-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது தி.மு.க தீர்மானக்குழு  செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின் சார்பாக கடந்த இரண்டு மாதங்களாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணங்களை வழங்கி வந்துள்ளார். இவருக்கு தமிழ்சங்கவி என்கிற மகளும், தமிழழகு என்கிற மகனும் உள்ளனர்.

மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் மற்றும் தற்போதைய தி.மு.க. மு.க. ஸ்டாலின் ஆகியோரின் நன்மதிப்பை பெற்றவரான குழந்தை.தமிழரசனின் இறப்பு விருத்தாசலம் பகுதி தி.மு.கவுக்கு பேரிழப்பாக நிர்வாகிகள், தொண்டர்கள் கருதுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்