Skip to main content

அப்பட்டமாக கடை விரித்து கள்ள மது விற்பனை; வைரல் வீடியோ

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

 Fake liquor sold by open shop; viral video

 

'போதை மாற்றும் பாதை' ‘போதை இல்லா தமிழகம்’ என எத்தனையோ தலைப்புகளில் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் சில இளைய தலைமுறையினரின் செயல் செய்திகளாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகிலேயே அவை மலிவாகக் கொட்டிக் கிடப்பதுதான் சில நேரம் சமூக வலைத்தளங்களை அதிர வைக்கிறது. அண்மையில் கள்ள மது விற்ற வழக்கில் தாய்  சிறை செல்ல, புத்தகப் பையுடன் சிறுவன் ஒருவன் கள்ள மது விற்றது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள காட்சிகள் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ரெட்டிமாங்குப்பம் ஆற்றங்கரையோரம் சட்ட விரோதமாக கள்ள மது விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது. தினக்கூலிக்கு ஆட்களை வைத்து கல்லா கட்டும் அளவிற்கு விற்பனை நடைபெறுகிறது என்றால் பாருங்களேன். அந்தப் பகுதியில் கள்ள மது விற்பனை செய்பவரிடம் பேசிக்கொண்டே இளைஞர் ஒருவர் மது வாங்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், 

 

மது விற்பவர்: ''எத்தனைப்பா...”

இளைஞர்: “ஒன்னு கொடு தலைவா ஃபர்ஸ்ட்டு...”

மது விற்பவர்: “அட ரெண்டு வாங்கிக்கப்பா...”

இளைஞர்: “ஒன்னு கொடு தலைவரே...”

மது விற்பவர்: “அட ரெண்டு வாங்கி போடேன். வயசு புள்ளைங்க ரெண்டு குடிக்கிறதில்ல...”

இளைஞர்: “சரிதான்... நேத்து ரெண்டு போட்டேன் ஒன்னுமே தேரிலேயே...”

மது விற்பவர்: “சாப்பிட்டியா வயிறு நப்ப... இந்தா (என மது பாக்கெட்டை கொடுத்து) நீயே வந்து சொல்லணும் போதை ஏறிடுச்சுனு...'' என அந்த வீடியோ உரையாடல் இருக்கிறது.

 

 Fake liquor sold by open shop; viral video

 

இவர்களுக்குப் பின்புறம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் கடக்கும் காட்சிகள் தெரிகிறது. இப்படி அப்பட்டமாக கடை விரித்து கள்ள மது விற்பனை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்