Skip to main content

களமிறங்கிய இ.டி; விஜயபாஸ்கர் வீட்டின் முன் குவியும் அதிமுகவினர்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

அதேபோல் விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமான வரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் மீதான குட்கா வழக்கும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு அதிமுக போகவில்லை என்பதால் எங்களை பயம் காட்ட இதுபோன்ற சோதனைகளை பாஜக அரசு செய்து வருகிறது. இது பாஜகவின் இயலாமையைக் காட்டுகிறது என்கின்றனர் அந்தப் பகுதி ர.ரக்கள்.

வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை என ஒவ்வொரு முறையும் சோதனைகள் நடக்கும் போதும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் அவரது வீட்டில் குவிவது வழக்கம். அதேபோல் இன்றும் குவிந்துள்ளனர். குவிந்துள்ள ர.ர.க்கள், பாஜகவின் அராஜகம் இந்த அமலாக்கத்துறை சோதனை என்று பேசிக்கொள்கின்றனர். இவற்றுக்கெல்லாம் நடக்க உள்ள தேர்தலில் பாஜகவுக்கு பதில் சொல்வோம் என்றும் ஆவேசமாகப் பேசி வருகின்றனர். சுமார் நான்கு மணி நேரமாக இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்