Skip to main content

“காவலர்களின் நலன் காக்க தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
DMK to protect the welfare of policemen CM MK Stalin confirmed

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற காவலர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று (28.02.2024) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியை முடித்திருக்கின்ற 19 காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் 429 காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 19 காவல் துணைக் கண்காணிப்பாளர்களில் 13 பேர் பெண்கள். 429 காவல் உதவி ஆய்வாளர்களில் 74 பேர் பெண்கள். காவல்துறையில் சமூகநீதி நிலைபெற்று வருவதன் அடையாளமாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.

காவல் பணி என்பது ஒரு வேலை இல்லை. அது சேவை. அதை காவலர்கள் முழுவதும் உணர்ந்து பணியாற்ற வேண்டும். நேர்மையாக கடமையை செய்வதன் மூலம் மக்களுடைய நன்மதிப்பை பெறமுடியும் என்பதை காவலர்கள் மறந்துவிடக் கூடாது. நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தால் மட்டும்தான். காவல்துறையினரால் தங்களுடைய பணியை திறம்பட செய்ய முடியும். திமுக அரசு எல்லா தரப்பு மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதிலும் சமூகநீதியை நிலைநாட்டுவதிலும் உறுதி பூண்டிருக்கிறது.

இன்றைக்குக் காவல் பயிற்சி முடித்து பணிக்குப் போகின்ற ஒவ்வொரு அதிகாரியும் அதை உறுதி செய்கின்ற வகையில் மக்களுடைய நண்பர்களாகத் திகழ்ந்து காவல்துறைக்கும் இந்த அரசுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பொதுமக்களை நேசிப்பது. சாதி மத வேறுபாடுகளைக் கடந்து எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல் சட்டத்தின் முன் எல்லோரையும் சமமாக நடத்துவது. சட்டத்தை மீறுபவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவது போன்ற காரணங்களால் தான். காவல்துறையை பொதுமக்களின் நண்பன்' என்று குறிப்பிடுகிறோம் அதற்கு ஏற்றாற்போல் காவலர்கள் பணியாற்ற வேண்டும்.

காவல் நிலையத்திற்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடம் ஆறுதலாகப் பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல்துறைக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவை வலுவாக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் உங்களுக்கு இருக்கின்ற பங்கை ஆற்றுவது மூலமாக அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு நல்ல பாலமாக திகழ வேண்டும். தொழில்நுட்பத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி குற்றங்கள் நடப்பதற்கு எந்த விதத்திலும் அனுமதிக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நல்லாட்சியின் இலக்கணம் என்பது மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்து தருவதுதான். அப்படிப்பட்ட வாழ்க்கையை திமுக அரசு அமைத்துத் தந்திருக்கிறது. அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். குற்றமற்ற சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருகின்ற அதே வேளையில் சட்டப் பரிபாலனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதிலும் நீங்கள் முனைப்பு காட்ட வேண்டும். ஒரு குற்றம் மறுபடியும் நடக்காமல் இருப்பதற்கான நடைமுறைகளையும் ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். இத்தகைய சேவைப் பணியில் இருக்கின்ற காவலர்களின் நலன் காக்க தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்