Skip to main content

திராவிடம் என்ற பெயர் வைத்தால் மட்டும் போதுமா? இன்றைக்கு பா.ஜனதாவுக்கு அடிமையாக அதிமுக இல்லையா? சி.ஆர்.சரஸ்வதி

Published on 17/03/2018 | Edited on 17/03/2018
Sarascrs 450.jpg wati


திராவிட என்ற பெயர் வைத்தால் போதுமா? இன்றைக்கு பா.ஜனதாவுக்கு அடிமையாக அதிமுக இல்லையா? என சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார். 
 

நாஞ்சில் சம்பத் தினகரன் கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகியது தொடர்பாக நடிகை சி.ஆர். சரஸ்வதி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 

முதலில் சின்னம்மாவிடம் சேருவதற்கு முன்பு நாஞ்சில் சம்பத், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று ஒரு விளக்கத்தை கொடுத்தார். சின்னம்மாவை எனக்கு தெரியாது என்றார். பின்னர் கட்சியில் சேர்ந்தார்.


தற்போது அவரது காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திராவிட என்ற பெயர் இல்லாததால் நான் விலகுகிறேன் என்று சொல்கிறார். அம்மா ஒரு திராவிட தலைவிதான். சமூக நீதி காத்த வீராங்கனை என்று வீரமணியே அம்மாவை பாராட்டி இருக்கிறார். அம்மாவை திராவிட தலைவியாக பார்த்த பிறகு திராவிட என்ற பெயர் சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை.
 

மக்களுக்காக அம்மா உழைத்தார். மக்களுக்காக இன்று இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திராவிட தலைவியாக அம்மா வாழ்ந்தார். அம்மா திராவிட தலைவி. எனவே அதை ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் எதனால் அதிருப்தியில் இருக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். எங்களுக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை.
 

ஒரு தலைமை ஒரு முடிவை எடுக்கும் போது அதற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அம்மா இருக்கும் போது ஒரு முடிவு எடுத்தால் யாராலும் அதை மறுத்து பேச முடியாது. அம்மா பேச்சுக்கு மறு பேச்சு யாராவது பேசி இருக்கிறார்களா? அதுதான் தலைமைக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.நாம் காட்டுகிற விசுவாசம்.
 

சின்னம்மாவும், தினகரனும் 33 வருடங்களாக அம்மாவுடன் வாழ்ந்தவர்கள். ஒரு முடிவை எடுக்கிறார்கள் என்றால் நிச்சயமாக அரசியல் அனுபவத்தை அவர்கள் அம்மாவிடம் கற்றுக் கொண்டவர்கள். அவர்கள் ஒரு நியாயமான வி‌ஷயத்தைத்தான் செய்வார்கள்.
 

அம்மா சொல்வதை நாங்கள் வேதவாக்காக எடுத்துக் கொண்டோம். அவர் ஒரு வி‌ஷயத்தை சொன்னால் அது கண்டிப்பாக நல்ல வி‌ஷயமாக தீர்க்கமான முடிவாக இருக்கும். 2014-ல் அம்மா தனியாக நிற்க வேண்டும் என்று சொன்ன போது எல்லோரும் யோசித்தார்கள். ஆனால் சாதித்து காட்டினார்.

 

TTV Dhinakaran


 

அது போல தலைமை ஒரு முடிவை எடுத்தால் அதை ஆராய்ந்து தான் எடுப்பார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் திராவிடர்க்கு எதிராக எந்தவிதமான கருத்துக்களை சொல்வதற்கும் வழியில்லை.
 

அம்மாவை திராவிட தலைவி இல்லை என்று நினைத்தால்தான் அதை சொல்ல முடியும். அம்மா திராவிட தலைவி. அவர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். எனவே அதை காரணமாக சொல்ல முடியாது. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பாடு இருந்தால்தான் அம்மாவின் வழியில் இயக்கத்தை நடத்த முடியும். அ.தி.மு.க. என்று பெயரில் திராவிடம் உள்ளது. ஆனால் அவர்கள் பா.ஜனதாவிடம் மண்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசை எதிர்த்து பேசியதற்காகவே கே.சி.பழனிசாமியை விலக்கி வைத்திருக்கிறார்கள்.

 

nanjilsambath


 

திராவிட என்ற பெயர் வைத்தால் மட்டும் போதுமா?. இன்றைக்கு பா.ஜனதாவுக்கு அடிமையாக அவர்கள் இல்லையா? மதவாத சக்திகளுக்கு அடிமையாக அவர்கள் இல்லையா? ஆக பெயரினால் மட்டுமே விலகுகிறேன் என்ற காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 

அ.தி.மு.க.வை மீட்டெடுக்க தற்காலிகமாக இந்த அமைப்பை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இதை தினகரன் மேடையிலேயே சொன்னார். இதெல்லாம் நாஞ்சில் சம்பத்துக்கு தெரியும். அதன்பிறகு அவர் முடிவு எடுத்திருக்கிறார். அவர் ஏற்கனவே விலகி இருந்தார். பின்னர் சின்னம்மாவிடம் வந்தார். வைகோவிடம் பல ஆண்டுகள் இருந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 
 

சார்ந்த செய்திகள்