Skip to main content

‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட இடைக்காலத்தடை!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

CHENNAI HIGHCOURT

 

நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த ‘அண்டாவ காணோம்’ என்ற படத்தை இணையத்தளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால், நேரடியாக ஓ.டி.டி தளங்களில் படங்களை வெளியிட, தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.  

நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த அண்டாவ காணோம் படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. வேல்மதி இயக்கியுள்ள இந்தப் படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த நிலையில்,  ஜே.எஸ்.கே. பிரைம் மீடியா என்கிற ஓ.டி.டி தளத்தில், ஆகஸ்ட் 28 அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அவுட்டோர் யூனிட் நிறுவனம் நடத்திவரும் சங்கையா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், ‘படத் தயாரிப்புக்காக அவுட்டோர் யூனிட் உபகரணங்களை சப்ளை செய்தோம். அதுபோல், தயாரிப்பாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கடனும் அளித்தோம். ஆனால், வாடகை மற்றும் கடன் தொகையை அவர் உரிய நேரத்தில் செலுத்தவில்லை. எனவே, படம் வெளியிடத் தடை விதிக்க வேண்டும். எனக்கு அளிக்க வேண்டிய கடன் பாக்கியை திருப்பித் தர உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் பி.எல்.நாராயணன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், அண்டாவ காணோம் படத்தை வெளியிட இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்