Skip to main content

அண்ணா பல்கலைக்கழக உத்தரவு செல்லும்! -உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

chennai high court anna university students fee

 

 

கரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் வசூலிக்கும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

கரோனா ஊரடங்கின் காரணமாக இறுதியாண்டு பருவத் தேர்வை தவிர, மற்ற அனைத்து பருவத் தேர்வுகளையும் ரத்து செய்துள்ள நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆகஸ்ட் 14- ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த, அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டிருந்தார்.

 

தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கக்கூடாது என, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பயிலும் ஹரிஹரன், சுதன், சௌந்தர்யா மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கம் ஆகியோர் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்றது. 

 

அப்போது, மனுதாரர்கள் தரப்பில், ‘தேர்வு நடத்தப்படாத நிலையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு விடைத்தாளுக்கு 42 ரூபாய் என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம்,  4 லட்சம் மாணவர்களிடமிருந்து 13 கோடியே 44 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. கரோனா ஊரடங்கால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பெற்றோர்கள் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.’என்று வாதிடப்பட்டது.

 

அண்ணா பல்கலைகழகம் தரப்பில் ‘ஒரு தேர்வுக்கு ஒரு மாணவருக்கான கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் தயாரிப்பதற்கான ஊதியம், ஆய்வக செலவுகள், இணையதள இணைப்பு, மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுக்கு 148 ரூபாய் செலவிடப்படுவதால், ஒரு தேர்விற்கு 150 வீதம் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் மாதமே தேர்வுகள் வழக்கம் போல நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், விடைத்தாள் திருத்தும் செலவைத் தவிர மற்ற அனைத்தும் முடிந்துவிட்டது. அதன்படி, ஒரு மாணவரின் ஒரு தேர்வுக்கு தற்போது 126 ரூபாய் 10 பைசா செலவாகியுள்ளது. இந்தக் கட்டணம் நியாயமானதுதான். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. கட்டணத்தை திருப்பிச் செலுத்த உத்தரவிட்டால் பல்கலைக்கழகத்துக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துவதோடு, தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடும். மாணவர்களின் வழக்குகளின் பின்னால்,  கல்லூரிகளும் இருக்கின்றன' எனக் குற்றம் சாட்டப்பட்டது.

 

இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் வசூலித்த அண்ணா பல்கலைகழக பதிவாளரின் உத்தரவு செல்லும். மாணவர்களிடம் வசூலித்த தேர்வுக் கட்டணத்தை, 4 வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திடம் அந்தந்த கல்லூரிகள் செலுத்த வேண்டும்’ என உத்தரவிட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை...’ - நீதிமன்றம் வேதனை

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
court anguish incident affects not only the women concerned

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு, மோகன கிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாகா கமிட்டியில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற விசாரணையில் மோகன கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மோகன கிருஷ்ணன் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தன் மீதான பாலியல் புகாரை எதிர்த்து மோகன கிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி கூறியதாவது, ‘பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இந்தச் சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பணியிடங்களில் பாலியல் தொல்லை நெறிபிறண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுக சமூக பிரச்சனையாகவும் உள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன் மன, உடல் ரீதியாகவும் பெண்களைப் பாதிக்கிறது’ எனத் தெரிவித்தார். மேலும், மோகனகிருஷ்ணன் தரப்பு சாட்சியை விசாரணை செய்யவில்லை என்பதால் மீண்டும் விசாரித்து அறிக்கை தர வேண்டும் என நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். 

Next Story

பொறியியல் படிப்பு; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Engineering Studies; Today is the last day to apply

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

கடந்த ஜூன் 6 ஆம் தேதியுடன் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. அதே சமயம் விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மூலம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வெளியிட்டிருந்த அறிவிப்பில்,'பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6 தேதி (06.05.2024) முதல் கடந்த 6 ஆம் தேதி (06.06.2024) வரை நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அதில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். தற்பொழுது மாணாக்கர்களின் கோரிக்கைகளை ஏற்றுத் தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை (10.06.2024) மற்றும் நாளை மறுநாள் (11.06.2024) என இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்படுகிறது.

இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் புதிதாக விண்ணப்பத்தினை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாகப் பதிவு செய்து, பதிவு கட்டணம் செலுத்தி தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்' எனத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகும். இதுவரை தமிழக முழுவதும் 2.50 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.