Skip to main content

‘மிக கனமழைக்கு வாய்ப்பு’ - மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
Chance of very heavy rain Meteorological Dept warns fishermen

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வந்தன. அத்தோடு தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) முதல் கத்தரி வெயில் தொடங்கியது. மேலும் 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்தக் கத்தரி வெயில் நீடிக்க உள்ளது. அதே சமயம் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்ததாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று (15.05.2024) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 3  மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கி.மீ  முதல் 45 கி.மீ வரையிலான வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்றும், நாளையும் (16.05.2024) மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அதே சமயம் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை பிறப்பித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்