இந்திய நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் குறிப்பாக, வாய், குரல்வளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட புகையிலை முக்கியக் காரணமாக இருக்கிறது.
கிட்டத்தட்ட 20 வகையான நச்சுப் பொருட்கள் புகையிலையில் பயன்படுத்தப் படுகின்றன. இப்படித் தயாராகும் புகையிலையை புகைத்தல், மெல்லுதல், நுகருதல் என எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும், மிகக் கொடிய உயிர்க்கொல்லியாகவே அமையும். ஒவ்வொரு ஆண்டும் 9 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துவதால் உயிரை விடுகின்றனர். புகைப்பழக்கம் உள்ளவர்களில் 89 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் என்றும், இவர்களில் 50 சதவீதம் பேர் புகைப்பழக்கம் தொடர்பான பிரச்சனையால் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியைக் கிளப்புகிறது.
புகையிலையில் பயன்படுத்தப்படும் நிக்கோடின் என்ற நச்சுப்பொருள், புகைப் பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது. இதன் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் கூட உயிருக்கே ஆபத்தாகக் கூட முடியும். வாழும் காலத்தை நரகமாக்கும் புகைப்பழக்கத்தைக் கைவிடுவதால் நீண்ட காலத்துக்கு ஆரோக்கிய வாழ்வை வாழமுடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒளிரவன் அறக்கட்டளையின் அமைப்பாளர் குணசேசகரன் ஒருங்கிணைப்பில், தன்னார்வலர்களான N.விக்னேஷ், S.B.செல்வஆகாஷ்ராஜ், R.ராஜேஸ், S.ராகவேந்திரன், A.சந்தோஷ், D.வினோத்குமார், M.விஷ்ணுராஜ், , S.குருபிரசாத், H.பர்வேஷ் முஷரப், B.பத்மநாபன், V.கவிஎழிலன், S.அஸ்வின்பாலாஜி, R.ராகுல், G.பிரித்திவ்ராஜ், G.தமிழரசன், R.லோகேஷ்வரன, A.விஷ்ணுவரதன், M.பாலாஜி, S.கிஷோர், K.கிஷோர், R.ஸ்ரீராம்பிரசாத், S.ஸ்ரீவிக்னேஷ் உள்ளிட்ட 30 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். இதில் 12 பேர் பள்ளி மாணவர்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 13-ந்தேதி தொடங்கிய இந்தப் பயணத்தில், 15-ந்தேதி அதிகாலை பாண்டிச்சேரி வந்தபோது ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டு உற்சாகமூட்டினார். திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தில் வைத்து, பயணத்தில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவித்தார். அங்கிருந்து சென்னை அடையாறில் உள்ள வி.ஹெச்.எஸ். பல்நோக்கு மருத்துவமனையில் மாலை பயணம் நிறைவு செய்யப்பட்டது. செல்லும் வழியில் எல்லாம் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகளும், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வையும் இளைஞர்கள் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஒளிரவன் அறக்கட்டளையின் குணசேகரன் நம்மிடம் பேசியபோது, “புகைப் பழக்கத்தால் அதற்கு அடிமையானவர்கள் மட்டுமின்றி, அருகில் இருப்பவர்கள் குறிப்பாக எந்தப் பாவமும் அறியாத குழந்தைகள் கடுமையாக பாதிப்பைச் சந்திக்கின்றனர். புகைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் ஒரு சிகிரெட்டுக்கு தங்கள் வாழ்நாளில் 14 நிமிடங்களை இழக்கின்றனர். ஆண்டுதோறும் புகையிலையால் அரசுக்குக் கிடைக்கும் வருமானமான ரூ.32 ஆயிரத்து 500-ஐ விடவும், புகையிலையால் ஏற்படும் நோய்களுக்கு செலவழிக்கும் தொகை (ரூ.37 ஆயிரத்து 500 கோடி) மிக அதிகம். ஆகவே, அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும் இந்த வாழ்க்கையைத்தான் நாம் அனைவரும் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, புகையிலையை அல்ல” என்று வலியுறுத்துகிறார்.