![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/w35A_VByR_Alu7TVnRaru9XrVWivS5EOw_ysyq_9V7g/1549559792/sites/default/files/inline-images/Varma.jpg)
இயக்குநர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள படம் ‘வர்மா’. தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படம் இம்மாதம் திரைக்கு வர இருந்தது. இந்நிலையில், இப்படத்தை இயக்கிய தயாரிப்பு நிறுவனம், வர்மா படம் கைவிடப்படுகிறது என்று அறிவித்துள்ளது.
தெலுங்குப்படமான அர்ஜூன் ரெட்டி போல் வர்மா படம் விறுவிறுப்பாக இல்லாததால் கைவிடப்படுகிறது என்று காரணத்தை கூறியுள்ளது. புதிய இயக்குநர், புதிய நடிகர்களைக்கொண்டு மீண்டும் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
காதலர் தினத்தில் வெளியாவதாக சொல்லப்பட்ட இப்படம் கைவிடப்பட்டது குறித்து திரையுலக வட்டாரம் பல்வேறு காரணங்களை கூறிவருகின்றது. வர்மா படத்திற்கு விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி சான்று கிடைக்காத காரணத்திலா ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. படத்திற்கு போடப்பட்ட பட்ஜெட் திட்டமிட்டபடி இல்லாததாக் ஏகத்திற்கும் எகிறியதாலும், படமும் தெலுங்கு அர்ஜூன் ரெட்டி போல் திருப்திகரமாக இல்லாததாலும் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கடந்த சில தினங்களாகவே பஞ்சாயத்து நடந்து வந்ததாகவும், இதில் சுமூகம் ஏற்படாமல் போகவே படத்தை தயாரிப்பாளர் கைவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தன் மகனை ஒரு மோதிரக்கையால்தான் இயக்கவைத்து முத்திரை பதிக்க வேண்டும் என்று நினைத்திருந்து, தனக்கு வாழ்வு கொடுத்த பாலா இயக்கத்திலேயே மகனை அறிமுகம் செய்வதில் பெருமை என்று பேசிவந்த விக்ரம் விழிபிதுங்கி நிற்கிறார். விக்ரமிற்கும் படத்தை பார்த்ததில் திருப்தி இல்லாததாகவும் தகவல்.