Skip to main content

கல்லூரி பேராசிரியர் மீது தாக்குதல்; மாணவர்கள் இடைநீக்கம்! பேராசிரியரும் சஸ்பென்ட்!!

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

jkl

 

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரிலுள்ள மந்தித்தோப்பு செல்லும் சாலையில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு கணிதத் துறையின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர் பேராசிரியர் சிவசங்கரன்(45). இவர் நேற்று முன்தினம் கல்லூரியிலுள்ள தனது அறையில் இருந்தபோது அங்கு வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதில் பேராசிரியர் மயங்கிச் சரிந்திருக்கிறார். அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் அவரை மீட்டுக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, என்னுடைய கணிதத் துறை மாணவர் ஒருவர் சக மாணவியைக் காதலித்தார். இதை நான் கண்டித்ததோடு அதனை இருவரது பெற்றோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். இதனால் ஆத்திரமான மாணவர், மற்றும் 3 மாணவர்கள் சேர்ந்து என் அறைக்குள் புகுந்து என்னைத் தாக்கினார்கள் என்று புகார் கூறியுள்ளார். இதன்பின் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

 

இந்நிலையில், இந்த தாக்குதல் காரணமாக இரண்டு மாணவர்களை கல்லூரி முதல்வர் நிர்மலா சஸ்பெண்ட் செய்திருக்கிறார். தவிர கல்லூரி பேராசிரியரின் நடத்தை குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தியவர் அதுகுறித்த அறிக்கையை நெல்லை மண்டல கல்லூரி கல்வி துணை இயக்குநருக்கு சமர்ப்பிக்க, அதனடிப்படையில் கல்லூரி பேராசிரியர் சங்கரனை இடைநீக்கம் செய்து கல்லூரிக் கல்வி துணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பேராசிரியர் மீது பாலியல் சீண்டல் குறித்த தகவலும் உள்ளன. அதுகுறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது என போலீஸ் தரப்பிலும் சொல்லப்படுகிறது.

 

jkl

 

இந்நிலையில் பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரணை செய்து அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் மனு கொடுத்துள்ளனர். இதனிடையே கல்லூரி மாணவர் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் பேராசிரியர் சிவசங்கரன் மீது 377வது பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். தாக்குதல் மற்றும் பாலியல் புகார் சம்பவங்களால் தூத்துக்குடி மாவட்டம் பரபரப்பாகியிருக்கிறது

 

 

சார்ந்த செய்திகள்