Skip to main content

கட்டணம் செலுத்தாவிட்டாலும் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்! -அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

anna university semester results students chennai high court

 

தேர்வுக் கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும்  மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஹரிகரன் மற்றும் செளந்தர்யா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் படித்துவரும் 7 லட்சம் மாணவர்களிடம், கட்டணமாக ரூ.1,450 என 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பால் வேலை மற்றும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 

anna university semester results students chennai high court

 

இந்த வழக்கு,  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (21/08/2020) விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி, அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டது. செமஸ்டர் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களுக்கு,  தேர்வு முடிவுகளை வெளியிட முடியாது எனவும் அறிவித்துவிட்டது இதனால், கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, பணம் கட்டினாலும், கட்டாவிட்டாலும் அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் உடனடியாக வெளியிட வேண்டும் என்று வாதம் செய்தார்.

 

அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பாக ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் கேட்டார்.

 

இதைக் கேட்ட நீதிபதி, செமஸ்டர் கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் மாணவர்களின் தேர்வு முடிவுகளை உடனே அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

 

 

சார்ந்த செய்திகள்