உண்ணாவிரததை கைவிட்டுவிட்டதால் சிறை விதிகளின் படி முருகனை சந்திக்கலாம்
உண்ணாவிரததை கைவிட்டுவிட்டதால் சிறை விதிகளின் படி முருகனை சந்திக்கலாம் என்று சிறைத்துறை சார்பில் ஐகோர்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகன் ஜீவசமாதி அடைய போவதாக ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் முருகனை சந்திக்க அனுமதிக்ககோரி அவரது உறவினர் தேன்மொழி வழக்கு தொடர்ந்தார். அப்போது முருகனின் உடல்நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் முருகன் 11 நாட்களாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளமால், தண்ணீர் மட்டும் குடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரை செய்து இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில் முருகன் நேற்று மாலை உண்ணாவிரத்தை கைவிடுவதாக அறிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஏ.செல்வம், ஆதிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டதால் அவரை சிறைத்துறை விதிகளின் படி சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுதாரர் மனுவின் மீது முன்று நாட்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
- சி.ஜீவா பாரதி