வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தவர்களில் 7 பேர், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அடுத்தடுத்து இறந்தனர். இவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்டார்கள் என்கிற தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இறந்த 7 நபர்களில் 4 பேர் கரோனா வார்டிலும், மற்றவர்கள் கரோனா அல்லாத உயர் சிகிச்சை வார்டிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் இறப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். ஆக்ஸிஜன் பிரச்சினையால் இறக்கவில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் நாராயணபாபு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கையை அரசுக்குத் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதில், 7 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் செல்வி ஆகியோருக்கு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.