கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்து நடைமுறையில் உள்ளது.
ஊரடங்கால் வேலைவாய்ப்பு இழந்து, வருவாய் இன்றி தவித்து வரும் பல்வேறு தரப்பினருக்கு நிவாரணம் வழங்கும் படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (10.05.2020) திமுகவின் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 85,000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வீதம் சுமார் 401 டன் அரிசியை வழங்கினார்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து 5 கிலோ கொண்ட அரிசி பைகளைத் தயார் செய்தனர். அதை நேரில் ஆய்வு செய்து பார்வையிட்ட எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகளிடம், தனது தொகுதிக்குட்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் முறையாக நிவாரண உதவிகள் சென்றடைய வேண்டும் என உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களைப் பார்வையிட்டு பகுதி வாரியாக வாகனங்களைப் பிரித்து நிர்வாகிகளிடம் ஒப்படைத்து பொதுமக்களுக்கு வீடு வீடாக நேரில் சென்று வழங்குமாறு அறிவுறுத்தினார்.