ஈரோடு டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறையினரின் 13 மணி நேர சோதனை நிறைவு பெற்றது.
ஈரோடு திண்டல் சக்தி நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம். டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர். இவர் மதுபான குடோன்களில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்களை கொண்டு செல்வதற்கான லாரியின் ஒப்பந்தத்தை பெற்று இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி ஈரோட்டில் உள்ள சச்சிதானந்தத்தின் வீடு, டிரான்ஸ்போர்ட் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 4 நாட்களாக தொடர்ந்து நடந்த இந்த சோதனையில் ரூ. 2 கோடியே 10 லட்சம் பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும் அவரது வங்கி லாக்கரையும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் சச்சிதானந்தத்திடம் வருமான வரித்துறை அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர், நேற்று காலை ஈரோடு திண்டலில் உள்ள சச்சிதானந்தம் வீட்டிற்கு வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு சோதனையை தொடங்கினர். அதிகாரிகள் வந்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டுள்ளதா என்ற விசாரணை நடத்தப்பட்டது.
ஏற்கனவே வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை அடிப்படையில் இந்த சோதனையை அமலாக்கத் துறையினர் மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சச்சிதானந்தம் வீட்டுக்கு முன்பு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஈரோடு தாலுகா போலீசாரும் அவர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9.20 மணிக்கு நிறைவடைந்தது. அதாவது கிட்டத்தட்ட 13 நேரம் நடந்த சோதனை நிறைவு பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.