Skip to main content

தலைவர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைத்த திருமாவளவன்!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
Thirumavalavan united the leaders on one platform!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர். இதற்காகத் திருச்சியில் பிரம்மாண்ட மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டது.

திருச்சி சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு நேற்று (26ம் தேதி) நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவிற்கு எதிரான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 28 கட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றியது முக்கியத்துவம் பெற்றது.

Thirumavalavan united the leaders on one platform!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வாழ்த்துரையை திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு படித்தார். திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் திபங்கர் பட்டாச்சார்யா, மாநில கட்சியின் தலைவர்களான வைகோ, காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், ஈஸ்வரன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

Thirumavalavan united the leaders on one platform!

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பாஜக மற்றும் இந்தியா கூட்டணியினர் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு மற்றும் பரப்புரை பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாநாட்டின் மூலம் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும் முக்கிய பணியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முன்னெடுத்துள்ளார். 

மாநாடு ஏற்பாடுகள் 

இந்த மாநாட்டிற்காக சிறுகனூரில் 50 ஏக்கர் பரப்பளவில் 1000 அடி நீளம் - 500 அடி அகலத்தில் திடல் அமைக்கப்பட்டது. மாநாட்டின் பிரதான நுழைவு வாயில் பழைய நாடாளுமன்ற வடிவிலும், பக்க வாயில்கள் அம்பேத்கரின் நினைவிடத்தின் வடிவிலும் அமைக்கப்பட்டது. நுழைவுப் பகுதியில் மாபெரும் புத்தக வடிவில் இந்திய அரசமைப்பின் முகவுரையும், அம்பேத்கரின் முழுவுருவச் சிலையும் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலை மற்றும் புத்தகத்தினை விசிக தொண்டர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் விழா மேடை புதிய நாடாளுமன்றக் கட்டட வடிவில் 80 அடி அகலத்தில் அமைக்கப்பட்டது. மேடையின் இரு பக்கத்திலும் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டு, தலைவர்கள் பேச வரும் முன்பு அவர்கள் பேச்சுகள் அந்த பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி, சின்னங்கள் வண்ணமயமாக ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சி நிரல்

இந்த மாநாட்டில் பாடகர் அறிவு குழுவினரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டுத் திடலின் வலதுபுறத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக மேடையில் இசை நிகழ்ச்சி நடந்தது. இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நடந்தன.

உறுப்பினர் சேர்க்கை இணைய தளம் 

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இணைய தளத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்தேக இணையதளம் வெளியிடப்பட்டது. இதனை தொல். திருமாவளவனுடன் இணைந்து விசிக தேர்தல் ஆலோசகரும் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனரும், இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவருமான ஆதவ் அர்ஜுனா வெளியிட்டார். மேலும் விசிக இணைய வழியில் ஆதவ் அர்ஜுனா, முதல் உறுப்பினராக தன்னை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார்.  

Thirumavalavan united the leaders on one platform!

இந்த மாபெரும் மாநாட்டிற்கான திட்டமிடல், வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு பணிகளை voice of commons தேர்தல் வியூக வல்லுநர்கள் மேற்பார்வையில் நடந்தது. வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் குழுவினர் கடந்த ஒரு வருடமாக விசிக கட்சி சீரமைப்பு, நிர்வாகிகள் நியமனம், திருமாவளவன் பிறந்தநாள் மணி விழா நிறைவு விழா, வடமண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி வகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.