Skip to main content

இலங்கையில் உருவாகிறது பா.ஜ.க.! திரைமறைவு ரகசியங்கள்!   

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

sri lanka country bjp leader gayathri raghuram

 

இலங்கையிலும் பாஜக கட்சியை துவக்குவதற்கான முயற்சிகள் ரகசியமாக முன்னெடுக்கப்படுவதாக இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினரும் காந்தளம் பதிப்பகத்தின் உரிமையாளருமான மறவன் புலவு சச்சிதானந்தம் தான், ’’இலங்கையில் உள்ள இந்துக்களை ஒருங்கிணைக்கும் முகமாக இந்த முயற்சியை எடுத்து வருகிறார்’’ என்கின்றன தகவல்கள்.

 

இதுகுறித்து அவரை தொடர்புகொள்ள முயன்றபோது அவரது எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அவருக்கு நெருக்கமான தமிழ்த்தேசியத் தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘’இலங்கை அரசின் கண்காணிப்பில் அவர் இருப்பதால் அவரது எண் எப்போதும் அனைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும். ஆனால், அவர் தனது அரசியல் செயல்பாடுகளை தனது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். இந்தியாவில் உள்ள பாஜக கட்சியை இலங்கையிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான தேவை இருப்பதாகவும் சொல்லிவருகிறார் சச்சிதானந்தம். 

 

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் அரசியல் கட்சிகள் உருவாகியிருக்கின்றன.

 

sri lanka country bjp leader gayathri raghuram

 

அந்த வகையில், சைவ சித்தாந்தங்களில் புலமைப் பெற்றவரான சச்சிதானந்தம், இலங்கையில் சிங்கள அரசாங்கத்தால் அழிக்கப்பட்டு வரும் சைவ திருக்கோயில்களை பாதுகாக்காக்கவும் அதனை மீட்டெடுக்கவுமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, இந்தியப் பிரதமர் மோடியின் கவனத்துக்குப் பல தகவல்களைக் கொண்டு சேர்த்துள்ளார்‘’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

அதே போல, தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவரான காயத்ரி ரகுராம் மூலம் பாஜக தலைவர்கள் சிலருடனும் விவாதித்துள்ளார் சச்சிதானந்தம். குறிப்பாக, இலங்கையில் பாஜக கட்சியைத் துவக்குவது குறித்து விவாதித்துள்ளனர். பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறார் காயத்ரி ரகுராம்.

 

இலங்கையில் பாஜகவை உருவாக்கும் சச்சிதானந்தத்தின் முயற்சிக்குப் பின்புலமாக இருந்து உதவிவரும் காயத்ரி ரகுராமிடம் நாம் பேசியபோது, ‘’இந்துக்களின் அடையாளத்தையும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் அழிக்கும் நடவடிக்கைகள் இலங்கையில் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. அவைகள் தடுக்கப்பட வேண்டும். இந்துக்களின் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாக்கவும், அதனை மீட்டெடுக்கவுமான அரசியல் கட்சிகள் அங்கு வலிமையாக இல்லை. இப்போதும் இரண்டாம்தர மக்களாகத்தான் தமிழர்கள் நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட கிடைப்பது அரிதாகியிருக்கிறது. அதனால், இந்தியாவில் இருக்கும் பாஜக போன்று, ’இலங்கை பாஜக’ என்ற ஒரு அரசியல் கட்சி இலங்கையில் தேவைப்படுகிறது. அதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் பாஜக உருவாவதற்கு நாங்கள் துணை நிற்போம் ‘’ என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.