Skip to main content

தமிழ் மண்ணை அமளிக்காடாக்க ராமராஜ்ஜிய யாத்திரை வருகிறது; வருமுன் காப்பீர் -அனுமதி மறுப்பீர்!கி.வீரமணி

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
vee

 

ராமராஜ்ஜிய யாத்திரை என்று கூறி விசுவ இந்து பரிஷத் என்ற சங் பரிவார் அமைப்பு தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது; அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக்கத் திட்டமிட்டுள்ளனர். 

வருமுன் காக்கும் வகையில் தக்க கவனம் செலுத்தி, இந்த அமளி ராம யாத்திரைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதியளிக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

 

அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டை ஜாதி வெறி, மதவெறி என்ற வெறிகளால் அமளிக்காடாக்கிட தூபம்போடும் விசுவ இந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரையை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்துள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் (தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ், முகமது அபுபக்கர்) ஆகியோரின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கவேண்டும்.

 

தற்போது சில இடங்களில் மதுரை, காஞ்சிபுரம் பகுதி களில் கிறித்துவ சமுதாயத்தினரைத் தாக்கியும், பெண்களின் கையில் உள்ள பைபிளைக்கிழித்தும், அதுபோல முசுலீம்களின் வழிபாட்டு இடத்தில் திரிசூலத்தை நட்டும்- வீண்வம்பு, வன்முறைக் கலவரங்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.,சங் பரிவார்கள் விதைத்து, செயல்படுத்தி வருகின்றனர்.

 

தமிழக அரசின் காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் அவல நிலை உள்ளது!  புதுச்சேரியில் காவல்துறையின் அனுமதி பெற்று நடத்தப்பட்ட திராவிடர் கழகக் கூட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992 இல் இந்தியா முழுவதும் இரத்த ஆறுகள், கொலைகள், மதக்கலவரங்கள் நடைபெற்ற நிலையில், அமைதிப் பூங்காவாக தமிழ் நாடுதான் விளங்கியது. ‘பெரியார் பூமி’தான் என்பதையும் நிரூபித்தது.

 

மேலும் இதற்குக் காரணம் திராவிட இயக்க ஆட்சிகள் என்று ஏடுகளே எழுதின. அந்த வரலாற்றைத் தலைகீழாக்கி, ‘‘பெரியார் சிலையை உடைப்போம்; அம்பேத்கர் சிலையை சேதப்படுத்துவோம்‘’ என்றெல்லாம் விஷமங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., பரிவார் வகையறாக்கள் வித்தூன்றுவது வீண்கலவரங்களை விதைக்கும் தவறான முயற்சிகளே!எனவே, தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு இதில் கண்டிப்பாக சட்டம், ஒழுங்கைப் பராமரித்திட காவல்துறைக்குத் தக்க சுற்றறிக்கை ஆணைகளைப் பிறப்பிக்கவேண்டும்.

 

திராவிடர் கழகம் எந்த மதங்களுக்கும் சார்பானது அல்ல; அதே நேரத்தில், மனிதநேயம், மனித உரிமைகள் அடிப்படையில் இப்படிப்பட்ட வன்முறைகளைத் துவக்கினால், அது அடக்கப்படுதல் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள ஓர் இயக்கம்.

 

இதில் முழு கவனத்தையும் தற்போதுள்ள ஆட்சி செலுத்தி, சமூக நல்லிணக்கத்தைக் குழிதோண்டி புதைக்க முயலும் நாசகார மதவெறிச் சக்திகளை அடக்கி வைக்க, தயவு தாட்சண்யமின்றி உரிய நடவடிக்கைகளை காவல் துறைமூலம் எடுக்கவேண்டியது அவசரம், அவசியம்!

 

குதிரை காணாமல் போன பின் லாயத்தை இழுத்துப் பூட்ட வேண்டாம்; முன்கூட்டியே நடவடிக்கை தேவை! தேவை!!’’

சார்ந்த செய்திகள்

Next Story

குற்றவாளி எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பளிப்பது மகா வெட்கக்கேடானது - கி.வீரமணி

Published on 04/06/2018 | Edited on 04/06/2018
svs

 

தமிழகத்தில் ஜாதி வன்முறையை ஏற்படுத்தத் துடிக்கும் பார்ப்பனியமும் - ஆரியமும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் என்றும், இவற்றை முன்கூட்டியே அறிந்து தமிழக அரசும், காவல்துறையும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்றும் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:

 

குன்னமிர்டல் எழுதிய ஆசிய நாடகம்
 ஜாதி - தீண்டாமை முற்றாக ஒழிக்கப்பட்டாலொழிய இந்திய நாட்டின் வளர்ச்சி - எவ்வளவுதான் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும், பெருமளவில் வளர்ச்சி ஏற்படவே ஏற்படாது என்றார் - சிங்கப்பூரை நவீன நாடாக ஆக்கிய மிகப்பெரிய அரசியல் விற்பன்னரான லீக் குவான் க்யூ (Lee Kuan Que) அவர்கள் - இந்தியாவைப்பற்றி சில ஆண்டுகளுக்குமுன் அவர் எழுதிய நூல் ஒன்றில்.

 

ஜாதியை ஒழிக்கவேண்டுமானால்
சமுதாய அறுவை சிகிச்சைமூலமே அது முடியும்

ஆசிய நாடகம் (‘Asian Drama’) என்ற தலைப்பிட்டு எழுதிய பொருளாதார நூல் ஒன்றில், நோபல் பரிசு பெற்ற சுவீடன் நாட்டு அறிஞரான குன்னர்மிர்டல் அவர்கள், இந்தியாவில் ஜாதியை ஒழிக்கவேண்டுமானால், அதற்கு ஒரு சமுதாய அறுவை சிகிச்சைமூலமே அது முடியும் (Caste is deeply entrenched in Indian Tradition and it could be removed only by a drastic surgery) என்று எழுதினார்! (இது தனி நூல்)  தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகிய புரட்சியாளர்களுக்கு நோபல் பரிசு கிடைக்காவிட்டாலும், அவர்களது கருத்துகளுக்கு (மேற்காட்டியபடி) நோபல் பரிசு கிடைத்துள்ளது என்றே சொல்லவேண்டும்!

 

சமூக விரோத செயல் வேறு உண்டா?

தமிழ்நாட்டில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். காலூன்றிட முடியவில்லை என்பதால், ஒரு குறுக்கு வழியில் அமைதிப் பூங்காவான தமிழ் மண்ணில் - பெரியார் மண்ணில் - ஜாதி, மதக் கலவரங்களை - திருவிழாக்களைப் பயன்படுத்தி - இரண்டு தனி நபர் அல்லது சில நபர்கள் மத்தியில் ஏற்பட்ட தகராறுகளை வைத்து, ஜாதி, மதக் கலவரங்களாகவே மாற்றி, அதில் குளிர் காய்ந்து தங்களது அமைப்பிற்கு ஆட்களைச் சேர்க்கும் அற்பத்தனங்களை அரங்கேற்றுகின்றனர். இதைவிட மிகப்பெரிய சமூக விரோத செயல் வேறு உண்டா? இத்தகையவர்களைவிட பெரும் விஷக் கிருமிகள் வேறு எங்கு உண்டு?

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் என்ற கிராமத்து விழாவில், தனி நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாகி, பிறகு திட்டமிட்ட ஜாதி ஆணவப் படுகொலைகளாக மாற்றப்பட்டு, தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் மூவர் வெட்டி வீழ்த்தப்பட்டதும், கலவர பூமியாக அப்பகுதி மாற்றப்பட்டதும் எவ்வகையில் நியாயம்? (கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தது சமூகக் குற்றமா?)

 

முதலைக் கண்ணீர் வடிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஏடு!

அதுபோலவே, தேனி அருகில் தாழ்த்தப்பட்ட சமூக சகோதர்களும், சிறுபான்மை சகோதரர்களும், இரண்டு கைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் கேலிக்கூத்துப்போல நிகழ்வுகள் (திருவிழாக்களின்போது) நடைபெற்றதை - ஆர்.எஸ்.எஸ். ஏடு பெரிதாக ஊதிப் பெருக்கி, ஆகா என்ன அநியாயம்? என்று ஒடுக்கப்பட்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் விடுகின்றது.

குஜராத் உன்னாவில், உ.பி.யில் இன்னும் பற்பல இடங்களில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் கலவரம் செய்யும் இந்தக் காவிக் கும்பல், இங்கே தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் பிரச்சினை என்றவுடன், அதை ஊதி ஊதிப் பெரிதாக்கிட முயலுகின்றது. தமிழ்நாடு அரசின் காவல்துறை சட்டம் - ஒழுங்குப் பிரிவும், நுண்ணறிவுப் பிரிவும் ஒருங்கிணைந்து முன்கூட்டியே மோப்பம் பிடித்தும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும், வருமுன்னர் காக்கும் முறைகளைக் கையாள முன்வரவேண்டும்!

 

தமிழக அரசிற்கும் - காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதா?

ஒரு சார்பு நிலை கூடவே கூடாது! தமிழக அரசின் நடவடிக்கை குறிப்பாக காவல்துறைக்குப் பெருமை சேர்ப்பதாகுமா? அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதுதான் பளிச்சென்று தெரியுமே! எடுத்துக்காட்டாக எஸ்.வி.சேகர் என்ற தேடப்படும் குற்றவாளி காவல்துறை பாதுகாப்புடன் ஜாலியாக காரில் பவனி வருவது) தமிழக அரசிற்கோ பெருமை சேர்ப்பதா?

குற்றவாளிக்குப் பாதுகாப்பளிப்பது மகா வெட்கக்கேடானது

ஒரு பாடகர் கோவன்மீதும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன்மீதும் பாயும் சட்டம், பெண் செய்தியாளர்களைப்பற்றி அவதூறு பரப்பிய அசிங்க மனிதர் ஒருவரது முன்ஜாமீன் மனு, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டும்கூட, சும்மா வேடிக்கை பார்ப்பதும், மாறாக குற்றவாளிக்கே பாதுகாப்பளிப்பதும் மகாவெட்கக்கேடானதல்லவா?
தூத்துக்குடியில் குண்டடிப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று பார்த்து ஆறுதல் கூறச் சென்ற அரசியல் கட்சித் தலைவர்கள்மீது வழக்குப் பதிவு செய்வது எவ்வகையில் நியாயமாகும்?

 

ஜனநாயகத்தில் துப்பாக்கித் துரைத்தனம் விரும்பத்தக்கதா? அதனால் ஆட்சிகள் நீடிப்பதற்குப் பதிலாக தங்கள் நாட்களைத் தாங்களே எண்ணிக் கொள்ளவேண்டி அல்லவா நேரிடும்!
ஜாதி முறையின் தத்துவமே, மதங்களின் வரலாறே கலவரம், வன்முறை இவைகளைத் வைத்துத்தான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும்; பிரிவுக்குள் பிரிவு - அடுக்குமுறை -Graded inequality   என்பதுதானே ஜாதியின் கோட்பாடு!

 

பார்ப்பனியம் - ஆரியம் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்

கலவரம் ஏற்படுத்தும் பார்ப்பனியம் - ஆரியம் நேரிடையாக கண்ணுக்குத் தெரியாமல் - கிருமிகளைப்போல் நோயை உருவாக்கி, உள்ளே ஒளிந்துகொள்ளும் வித்தையை - விஞ்ஞான ரீதியாக செய்கிறது. இது புரியாத அப்பாவிகளும், அறியாதோரும், பார்ப்பனர் எங்களைத் தாக்குவதில்லை; மற்ற ஜாதிக்காரர்கள்தானே தாக்குகிறார்கள் என்றால், பக்கத்தில் இருப்பவர்களோடுதான் உரசல் ஏற்படுமே தவிர, தள்ளி மேலே இருப்பவர்களுடன் நேரிடையாக மோதல் வராதே!

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும், நீதியும் கிடைக்கவேண்டும்

இதை உணராமல், ஜாதி மதக் கலவரங்களை நமது சகோதரர்களாக ஊரில் நிரந்தரமாக நட்புறவுடன் வாழவேண்டியவர்கள் பகைமைத்தீ அழித்துவிட இடம் கொடுக்காமல், சம்பந்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளும், தமிழக அரசின் காவல்துறையும் நோயின் மூல காரணத்தை அகற்றி, தீர்வு கண்டு - தமிழ்நாட்டில் ஜாதி, மதக் கலவரத்திற்கு இடமின்றி,சமூக நல்லுறவும், நல்லிணக்கமும் நீடித்து நிலைத்திட அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும், நீதியும் கிடைக்கவேண்டும் - அலட்சியம் வேண்டாம்!’’
 

Next Story

போராடுபவர்கள் மீது தடியடி! கைது! - கி.வீரமணி கண்டனம் 

Published on 10/04/2018 | Edited on 10/04/2018

 

vee


காவிரி உரிமை கோரி அய்.பி.எல் கிரிக்கெட்டுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது தடியடி! கைது! நடவடிக்கைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம்:

’’காவிரி நீர் உரிமை கோரி தமிழ்நாடே போராட்டக் களத்தில் கனன்று கொண்டிருக்கிறது. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் திரையுலகத்தினர், தமிழ் உணர்வாளர்கள், இளைஞர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், பல்வேறு இயக்கங்கள் எல்லாம் இந்த நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றன. காவிரி நீரை இழந்து நாடே துயரத்தில் ஆழ்ந்திருக்கும் இத்தருணத்தில் இப்படி நடப்பது இயல்பானதும்- அவசியமானதுமாகும்! இந்த உணர்வை புரிந்துகொள்ளத் தவறக்கூடாது.

 

    இந்த நேரத்தில் அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கேளிக்கை தேவையில்லை. மக்கள் உணர்வைத் திசை திருப்பும் சூதாட்ட விளையாட்டை சென்னையில் நடத்தக் கூடாது என்று போராடுபவர்கள் மீது தடியடி நடத்துவதும் கைது செய்வதும் கண்டனத்துக்குரியது.

 

    காவிரி உரிமைக்காக போராடுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு இத்தகைய அணுகுமுறையைக் கடைபிடிக்கலாமா?  உடனே அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.’’