Skip to main content

“என் கட்சிக்காரர்களுக்கு பெரிய வருத்தம் இருக்கிறது” - துரை வைகோவை ஆதரித்து கமல் பிரச்சாரம்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Kamal campaign in support of Durai Vaiko in trichy

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திருவரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “அரசியல்வாதிகளை விமர்சிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை. அதனை பொதுமக்கள் செய்துகொண்டே இருந்தால்தான் நாடு நலமுடன் இருக்கும். திராவிட மாடல் நேற்றோ, இன்றோ வந்ததில்லை. திராவிட மாடல் விரைவில் இந்தியாவுக்கான மாடலாக மாறும். திருச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. நலத்திட்டங்களை செயல்படுத்த போதிய நிதியை மத்திய அரசு தருவதில்லை.

உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு அளிக்கும் தொகையை விட தமிழ்நாட்டிற்கு கொடுக்கும் தொகை மிகமிக குறைவு. தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு 29 பைசாவை மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறது. அந்தத் தொகையில் செயல்படுத்தப்படுபவைதான் தமிழ்நாட்டின் திட்டங்கள். அந்த தொகையை அதிகரித்துக்கொடுத்தால் இன்னும் சிறப்பான திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்ய முடியும். பாஜக ஆட்சி வரும் போது என்ன சொன்னாங்க. சிலிண்டர் வாங்கும்போது பேங்கில் பணம் வரும் என்று சொன்னாங்க, ஆனால் வந்ததா?. சிலிண்டர் விலை இப்போது என்ன? கணக்கு பாருங்க. உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போது லாபத்திற்கு விற்ற அரசு அங்கே அமர்ந்திருந்தது. அதை விமர்சிக்க வேண்டியது நம் கடமை. அதை ஞாபகப்படுத்துவதற்காக தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.

தம்பி துரை வைகோவுக்காக இங்கே வந்திருக்கிறேன், எனக்காக இல்லை. இதில் என் கட்சிக்காரர்களுக்கு பெரிய வருத்தம் இருக்கிறது. நோ பெய்ன் நோ கெய்ன்.. வலியை தாங்கிக்கொள்ளுங்கள், நாளை நமதே என்று சொல்லியிருக்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே இருக்கிறது என்பது தான் என்னுடைய கேள்வி? இந்த வடை பசியை ஆற்றாது. ஏனென்றால், இந்த வடை வாயினால் சுட்ட வடை, அது நோயாகத்தான் முடியும். இதையெல்லாம் நியாபகப்படுத்தி சொல்ல இங்கே வந்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமானது இல்லை. இது சாதாரண காதல் அல்ல. அதையும் தாண்டி ரொம்ப புனிதமானது. எனக்கு மனிதன் தான் மதம். அரசியலில் மதம் கலந்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.

அரசியலை விமர்சிக்க வேண்டியது நமது கடமை. சீட்டுக்காக வரவில்லை, நாட்டுக்காகவே வந்திருக்கிறேன். திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும். திராவிட மாடல் என்பது ஒரு சித்தாந்தம். தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை, இந்தியா முழுவதும் செயல்படுத்தினால், உலகே இந்தியாவை திரும்பிப் பார்க்கும். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், இவையெல்லாம் இந்தியா முழுவதும் வரவேண்டும்.

தேசபக்தி என்பது பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியது. தேசம் என்பது பாரபட்சம் இல்லாமல், அனைத்து மொழிகளையும் பாரபட்சமில்லாமல் பேசி மகிழ்ந்திருப்பது. இந்தியாவில் மதக்கலவரங்கள் இல்லாத மாநிலம் என்றால், அது தமிழகம் மட்டும் தான். இதுவே ஒரு நல்ல அரசு, நல்ல நிர்வாகம், நல்ல அரசியல் நடைபெறுகிறது என்பதற்கான அடையாளம். 1920 இல் ஜஸ்டிஸ் கட்சியால் தொடங்கப்பட்டது தான் இந்த மதிய உணவுத் திட்டம். அந்த கட்சி ஆட்சியில் இல்லாததால் அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. ஆனால் அதை கவனித்துப் பார்த்த காமராஜர், அந்தத் திட்டத்தை செயல்படுத்தினார். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், அதைத் தொடர்ந்து இந்த திட்டம் தொடர்ந்து முன்னோக்கி சென்றாலும் நம்முடைய முதல்வர் அதோடு காலை உணவுத் திட்டத்தையும் சேர்த்து வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் செயல்படுத்தக்கூடிய மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் போன்றவற்றை இந்திய அளவில் நாம் செயல்படுத்தியதால் எத்தனையோ பல கோடி பெண்கள் பயனடைந்தார்கள். இந்த மகளிருக்கான உரிமை தொகை திட்டம் என்பது மக்கள் நீதி மையத்தினுடைய திட்டங்களில் ஒன்று. ஆனால், அதை கிண்டல் அடிக்காமல் நம்முடைய முதல்வர் அப்படியே நிறைவேற்றி இருக்கிறார். எனவே, அதற்காகவே இன்று நான் இங்கு வந்து நிற்கிறேன்.

பல நேரங்களில் ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்ற அமைப்புகளை வேட்டை நாயை போல பயன்படுத்துகிறது. நான் ஒழுங்காக வரி கட்டுகிறவன். இதுவரை அவர்கள் எனக்காக வேலை பார்த்தார்கள். ஆனால் இன்று, அவர்களுக்கு வீட்டு வேட்டை நாய்களாக மாறிவிட்டார்கள். அதேபோல் முதல்வர்களை கைது செய்து விட்டோம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால், அந்த முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் வாக்காளர்களும், பொதுமக்களும் ஆகிய நீங்கள் தான். அப்படி என்றால் அவர்கள் 100 கோடி மக்களை எதிர்க்கிறார்கள், கைது செய்ய துடிக்கிறார்கள் என்று தான் அர்த்தம்” என்று பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.