Skip to main content

ஏமாற்றப்படுவது அப்பாவி விவசாய பெருமக்கள் தான் என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது: விஜயகாந்த்

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
dmdmk

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர்  விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் மையங்களில் நடைபெறுகின்ற முறைகேடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

’’தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு செழித்தோங்கிய விவசாயம் இன்று பெரும் பின்னடைவில் உள்ளது. நெல்லுக்குரிய ஆதாரவிலை சரியாக கிடைக்கப்பெறாமல் விவசாயிகள் சொல்லெணாத் துயரினை அடைந்துவருகின்றனர். மேலும் டெல்டா பகுதிகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்க்கடன் சரிவர வழங்காத நிலையிலும், வெளியில் கடன் பெற்று, உழுது பயிர் செய்த நெல்தானியங்களை அரசு கிடங்கில் விவசாயிகளிடம் சரிவர கொள்முதல் செய்யாததால், உழுதவனுக்கு உரிய பலன் கிடைக்காமல் உயிர்விட்ட விவசாயிகள் பலபேர் என்பதை நினைக்கையில் நெஞ்சம் பதறுகிறது.


    
தமிழக அரசு கடந்த ஆண்டு அரசு பட்ஜெட்டில் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்படும் என்பதை இலக்காக வைத்தது. ஆனால் வயலும், வாழ்வும் என்ற நிலை மறந்து, விவசாயம் எனும் உயிரை மரணத்தின் வாசலுக்கு தள்ளியிருக்கிறது இந்த தமிழக அரசு. இந்த நிதியாண்டுக்கான 2018-2019 பட்ஜெட்டில் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்காக திருந்திய நெல்சாகுபடி முறை 10 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படும் என்றும், சாதாரண ரக நெல், குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 1,600 விலையிலும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 1,660 விலையிலும், அரசு கொள்முதல் செய்யும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், கொள்முதல் விலைக்கும் உள்ள வித்தியாசத்தை, நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக வழங்க 2018-2019 ஆண்டிற்கு தமிழக பட்ஜெட்டில் ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இது வெறும் கண்துடைப்பு நாடகமே என்றும், விவசாயிகளை ஏமாற்றும் விதமாகவும் அமைந்துள்ளது.

 

நெல் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதை பயிர் செய்வதற்காக கடுமையான சோதனைகளையும் தாண்டி, பயிரிட்டு, அதை கொள்முதல் செய்ய அரசின் நெல் கொள்முதல் கிடங்கிற்கு எடுத்து சென்றால், அங்குள்ள அதிகாரிகள் அதை கொள்முதல் செய்வதை தட்டிக்கழிக்கும் விதமாக பல துன்பங்களை விவசாயிகளுக்கு தருகின்றனர். குறிப்பாக நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய காலதாமதம் செய்வதற்காக ஈரப்பதம் உள்ளது என்றும், பதர் நிறைந்துள்ளது என்றும் காரணம் காட்டி காக்கவைப்பது, நெல்மூட்டைகளின் தரங்களை குறைத்து சொல்வது, பின் அந்த நெல்மூட்டைகளை எடை போடுவதற்கு ரூபாய் 40 முதல் 50 வரை கையூட்டு கேட்பது போன்ற பல துன்பத்திற்கு விவசாயிகளை ஆளாக்குகின்றனர். இதனால் விவசாயிகள் விரக்தியடைந்து அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு எடுத்துசென்று விவசாயிகள் வியாபாரிகளிடம் அரசு நிர்ணயித்த விலையை விட, குறைந்த விலைக்கு சான்றாக (ஒரு குவிண்டாலுக்கு) தமிழக அரசு ரூபாய் 1,600 என்று நிர்ணயித்தால், அவர்களுக்குள்ளாக உடன்படிக்கை செய்து ரூபாய் 1,300 என அவசரகதியில் நெல்லை கொள்முதல் செய்கின்றனர். பின்பு அதை மீண்டும் அரசு கொள்முதல் கிடங்களில் ஒரு மூட்டைக்கு ரூபாய் 200 முதல் 300 வரை வித்தியாசத்தில் கையூட்டு கொடுத்து அரசு கிடங்குகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

 

இதனால் ஏமாற்றப்படுவது அப்பாவி விவசாய பெருமக்கள் தான் என்பதை அறியும்போது மிகவும் வேதனையாக உள்ளது. சிலநாட்களுக்கு முன்புகூட இத்தகைய கடுமையான துன்பத்தினால் நாகை மாவட்டம், வேதாரண்யத்திற்கு அடுத்த கரியாப்பட்டினம் மேற்கு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்கின்ற விவசாயி உயிரிழந்துள்ளார். பெரும்பாலும் டெல்டா பகுதி விவசாயிகள் பெரும்துன்பத்திற்கு ஆளாகி கடுமையான நெருக்கடியினால் அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டின் விலையின்படி, தங்களுக்கு நெல் கொள்முதல் விலை கிடைக்கப்பெறவில்லை என்பதையும் அரசின் திட்டங்கள், வெறும் ஏட்டளவில் உள்ள வாய் வார்த்தைகளாகவே உள்ளன என்றும், இதனால் லாபம் அடைவது இடைத்தரகர்களான வியாபாரிகள் தான் என்பதையும், தெள்ளத்தெளிவாக விவசாயிகள் தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் எடுத்துரைத்து மனம் குமுறுவதை பார்க்கும் பொழுது, விவசாயிகள் சேற்றில் கால்வைத்தால் தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும் என்கின்ற கூற்றை நினைவில் கொண்டு இந்த ஆட்சியாளர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

Next Story

விஜயகாந்த் மறைந்து 100ஆவது நாள் - கண்ணீருடன் பிரேமலதா அஞ்சலி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024

 

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்திற்கு இன்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 100 நாள்கள் நிறைவைடைகிறது. இதையொட்டி பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகன் சண்முகபாண்டியன் உடனிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்