Skip to main content

“தி.மு.க. என்றாலே சிம்ம சொப்பனம் தான் என்பதால், எப்போதும் நடுங்கும் முதலமைச்சரும், ஆட்சியாளர்களும் துணிவிருந்தால், எங்கள் மீது வழக்குப் போடட்டும்!” -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால்!

Published on 26/09/2018 | Edited on 26/09/2018

 

 

முதலமைச்சர் பதவிக்கே களங்கம் விளைவிக்கும் வகையில், நாளொரு ஊழல் பொழுதொரு முறைகேடு என கஜானாவைத் தினந்தோறும் திருடிக் கொழுத்துக் கொண்டிருக்கும் எடப்பாடி அரசினர், தங்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியையும், கோபத்தையும் மறைக்க நினைத்து, தி.மு.க.வுக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடத்தி, ஜனநாயகத்தையே நகைச்சுவைப் பொருளாக்கி நாற்றமெடுக்கச் செய்திருக்கிறார்கள்.
 

கடந்த 2011 முதல் ஆட்சியில் இருப்பது அ.தி.மு.க.தான்; தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கிறது. எங்காவது, 7 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியாக உள்ள அரசியல் கட்சிக்கு எதிராக, ஆளுங்கட்சியின் முதலமைச்சர் - துணை முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாரும் கூடிக் கும்மாளமிட்டு போராட்டம் நடத்திக் கூப்பாடு போடும் கேலிக்கூத்தைக் கேட்டதுண்டா? கண்டது உண்டா? அந்த இழிவான - மலிவான பெயரைப் பெற்றவர்கள்தான் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்.
 

ராஜபக்சே ஏதோ சொல்லி விட்டார் என்று, அதை முழுமையாகக் கூடப் படித்துணராமல், தி.மு.க மீதும், காங்கிரஸ் மீதும் போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டும், கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறது ஆளுங்கட்சியான அ.தி.மு.க.  ஈழப்பிரச்சினையில் 1956 முதல் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அரசியல் இயக்கம் எது என்பதும், ஐ.நா. மன்றம் வரை சென்று அதற்காக மனு அளித்த இயக்கம் எது என்பதும் ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டு மக்களும் நன்கறிந்த உண்மைதான். அதேநேரத்தில், போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்; பிரபாகரனைக் கைது செய்து கொண்டுவந்து தண்டனை தர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி ஏகடியம் பேசி எள்ளி நகையாடி, ஈழத்தமிழருக்கு உதவி செய்த காரணத்திற்காக தி.மு.க. ஆட்சியைக் கலைத்திட, ஜனநாயக விரோதக் குரோதத்துடன் செயல்பட்டது அ.தி.மு.க. என்கிற துரோக வரலாறும் பதிவாகியிருக்கிறது; அதை ஈழத்தமிழர்களும் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள்.
 

துரோகமும், ஊழலும் அ.தி.மு.க. என்ற அரசியல் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒன்றை மறைத்தாலும் ஒன்று வெளிப்பட்டே தீரும். அதை அறியாத அரசியல் அறிவிலிகள், தி.மு.க. மீது ஈழப் பிரச்சினைக்காகக் குற்றம் சுமத்தி, கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியதை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களும் ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை; ஏன் அ.தி.மு.க.வினரே அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பதன் அடையாளமாகத்தான், கண்டனப் பொதுக்கூட்டத்தில் “ஆபாச நடனம்” அரங்கேறியிருக்கிறது. அந்த அருவருப்பைப் பார்த்தால் ராஜபக்சேயே கூடச் சிரித்து அலட்சியம் செய்திருப்பார்.
 

எடுத்துக்கொண்ட பிரச்சினையைக் கூடப் பேசாமல் அல்லது ஈழப் பிரச்சினையின் அறுபதாண்டு கால வரலாற்றைப் பேசத் தெரியாமல், தி.மு.க.வைப் பற்றி மட்டுமே, முதலமைச்சரில் தொடங்கி அத்தனை பேரும் பேசியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே, எதிர்க்கட்சியாக இருந்தாலும் தி.மு.க.தான் மக்களின் மகத்தான செல்வாக்கைப் பெற்றிருக்கும் இயக்கமாக இருக்கிறது என்ற உண்மை, அ.தி.மு.க.வினரை உறங்க விடாமல் உறுத்திக்கொண்டே இருக்கிறது என்பது புரிந்துவிடும்.
 

ஊழல் ஆவணங்கள் ஒவ்வொரு நாளும் சிக்கிக்கொண்டே இருப்பதால், மாநில ஆட்சியாளர்களைத் தன் கைப்பாவையாக வைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு இந்த கேலிக்கூத்துப் பொதுக்கூட்டத்தின் பின்னணியில் இருக்கிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. காரணம், கொடுங்கோலன் ராஜபக்சேவை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரை சந்திக்க வைத்தவரே பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரமுகர்தான். அதுமட்டுமல்ல, ஈழ விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகளை - அவர்களின் கடற்படைப் பிரிவினை ஒடுக்கி அழிப்பதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் உதவினார் எனவும் அவர் இல்லையென்றால் எங்களால் கடற்புலிகளை அழித்தொழித்திருக்க முடியாது என்றும் ராணுவ ரீதியான உதவி - பயிற்சிகளை வாஜ்பாய் அளித்தார் எனவும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அங்குள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்று இரங்கல் குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.
 

அப்படியென்றால், அ.தி.மு.கவினருக்கு உண்மையாகவே ஈழத்தமிழர் மீது அக்கறை இருக்குமென்றால், வாஜ்பாய் அவர்கள் சார்ந்திருந்த பா.ஜ.க.வைக் கண்டித்துதானே முதற்கட்டமாகப் பொதுக்கூட்டம் - போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். எஜமானர்களை எதிர்த்து எப்படிப் போராட்டம் நடத்த முடியும்? அதுவும் தங்களின் ஊழல் சிண்டு வசமாக டெல்லி எஜமானர்களிடம் சிக்கியிருக்கும் போது அவர்கள் உத்தரவுக்கேற்பத்தானே ஊளையிட முடியும்!
 

கொள்ளையடிப்பதற்காகவே பதவி ஒன்றையே குறியாகக் காப்பாற்றிக்கொண்டு, மாநில உரிமைகளை எல்லாம் மத்திய அரசிடம் வலிந்து சென்று அடகு வைத்துள்ள ஆட்சியாளர்கள், அடுத்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திப் பேசுவது, தங்கள் முகத்தைத் தாங்களே கண்ணாடியில் பார்க்க சகிக்காமல் பயந்து நடுக்கம் கொள்வதற்குச் சமமானது. தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்றால் இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் நீங்கள் வழக்குப் போட்டு நிரூபித்திருக்க வேண்டியதுதானே? அதை யார் தடுத்தார்கள்? புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் என்று சொல்லி, நீங்கள் அமைத்த விசாரணை கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் அளித்துள்ள ‘சான்றிதழை’ப் படித்துப் பாருங்கள். ஊழலில் புரண்டு புழுத்துப் போனவர்கள் யார் என்பது தெரியும்.
 

தலைமைச் செயலகத்தில் ரெய்டு, டி.ஜி.பி. அலுவலகத்தில் ரெய்டு, அமைச்சர்கள் வீடுகளில் எல்லாம் ரெய்டு என உங்களுடைய ஊழல் முறைகேடுகளால் தமிழ்நாட்டின் தனிப்பெருமை தாழ்ந்து போய் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கிய குட்கா ஊழலை சட்டமன்றத்திலேயே ஆதாரத்துடன் நிரூபித்த கட்சிதான் திமுக. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக, ஆதாரப்பூர்வமாக செயல்பட்டு நீதிமன்றத்தை நாடிய காரணத்தினால் தான், குட்கா ஊழல் இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அதேபோல், முதலமைச்சர் தன்னுடைய சொந்தங்களுக்கு நெடுஞ்சாலைத் துறையில் அளித்த டெண்டர்களில் ஊழல், துணை முதலமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என தொடர்ந்து ஊழல் பட்டியல் விசாரணைக்கு அணிவகுத்து நிற்கின்றன.  
 

அவை எதுவரை போகுமோ என்றெண்ணி கவலை உங்களை வாட்டினால், அதற்கு நானா பொறுப்பு? காற்றாலை மின்சார ஊழல் குறித்து ஆதாரத்துடன் விளக்கிய நிலையில், என் மீது பாய்ந்தாரே மின்துறை அமைச்சர்! வழக்குப் போடுவேன் என்றாரே! தாராளமாகப் போடட்டும் என நான் சொன்ன பிறகும், மின்சார “ஷாக்” அடித்த மாதிரி பம்முகிறாரே ஏன்? அ.தி.மு.க. ஆட்சியின் ஒவ்வொரு ஊழல் தொடர்பாகவும் நீதிமன்றத்திற்கு தி.மு.க. சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 

உங்களுடைய அரைகுறை அச்சுறுத்தலுக்கு எல்லாம் யாரும் அஞ்சமாட்டார்கள். தி.மு.க. மீது உங்களால் அப்படி குற்றம் சுமத்த முடியுமென்றால், நீதிமன்றத்தில் சென்று நிரூபித்துக் காட்டுங்கள்.  அதற்கு வக்கின்றி – வகையின்றி – தெம்பின்றி - திராணியின்றி ஈழத்தமிழர்களின் பெயரால் அரசியல் லாபம் தேட முயற்சித்து, அதில் தி.மு.க. மீது ஊழல் புகார் சொல்வதும், தி.மு.க.வை ஒரு கம்பெனி எனப் பேசுவதும் நாவடக்கம் இல்லாத நாலாந்தரச் செயல் என முதலமைச்சரையும் அவரைச் சார்ந்தவர்களையும் எச்சரிக்க விரும்புகிறேன்.
 

முதல்வர் பதவியைப் பயன்படுத்தி ஊழல் செய்வதற்காகவே எத்தனையெத்தனை கம்பெனிகளை உங்கள் கட்சித் தலைமை ஆரம்பித்தது, எவ்வளவு கொள்ளையடித்தது என்பது நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பின் மூலமும், அதனை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமும் உலகத்திற்கே தெரிந்துவிட்டது. அந்த அழுக்கு நிறைந்த வரலாற்றிலிருந்து அ.தி.மு.க.வால் ஒருபோதும் தப்பிக்க முடியாது. ஊழல் வழக்குக்காக இரண்டு முறை, ஒரு முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்ட மலிவான பெருமையும் இந்திய வரலாற்றிலேயே உங்கள் அ.தி.மு.க. என்ற போலி கம்பெனிக்குத் தான் உண்டு.  எங்கள் முதுகை பார்ப்பதை விடுத்து, உங்கள் முகத்தைப் பாருங்கள். கரியும், கறையும் மட்டுமே அதில் அப்பிக் கிடக்கிறது.
 

தி.மு.க. என்பது விமர்சனங்களையும், பழிச்சொற்களையும், நெருக்கடிகளையும் துணிவுடன் எதிர்கொண்டு நெருப்பாற்றில் நீந்தி புடம் போட்ட தங்கமாக எழுந்து நிற்கிற இயக்கம். ஆட்சி மாறும்; காட்சி மாறும்; கவனத்தில் கொள்க! என எச்சரிக்கிறேன். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.