Skip to main content

செய்தியாளர்களை சந்திக்கிறார் அர்ஜூனமூர்த்தி

Published on 30/12/2020 | Edited on 30/12/2020
ddd

 

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தொடங்கப்படுவதாக இருந்த அரசியல் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினிகாந்த் அவர்களால் நியமிக்கப்பட்ட ரா.அர்ஜூனமூர்த்தி இன்று (30.12.2020) மாலை 3.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். 

 

ஜனவரியில் கட்சி தொடக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என்று ட்வீட்டரில் பதிவிட்ட ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, கட்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும், அர்ஜூன மூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்திருப்பதாக ரஜினிகாந்த் அறிவித்தார். 

 

இந்தநிலையில் நேற்று, கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்று அறிக்கை வெளியிட்டு அறிவித்தார் ரஜினிகாந்த். இதையடுத்து இன்று தமிழருவி மணியன் வெளியிட்டிருந்த அறிக்கையில், ''என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன.

 

அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்துவிட்டது. சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை.

 
 
நான் ஒருபோதும் அறத்திற்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை. இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது.

 

மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரவேண்டும்; மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்கவேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம். இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன.

 

மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது.

 

எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோத்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன். தி.மு.க.விலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜூன மூர்த்தி இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்