Skip to main content

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார் நீரவ்மோடி! 

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

UK government approves extradition of Nirav Modi


மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் வைர வியாபாரி நீரவ் மோடி. வைர வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த தொழிலதிபர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நீரவ் மோடி சிக்கினார். அவர் மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்யத் துடித்தனர்.

 

இதனையறிந்த அவர், சிபிஐ அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஹாயாக லண்டனுக்கு பறந்தார். பிரிட்டனில் நீரவ் மோடி பதுங்கியிருப்பதை மோப்பம் பிடித்த மத்திய மோடி அரசு, நீரவ் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு இழுத்து வரும் முயற்சிகளில் குதித்தது. இதற்காக இண்டர்போலின் உதவியையும் நாடியது மத்திய அரசு. மேலும், பிரிட்டன் அரசுக்கு கோரிக்கையையும் வைத்திருந்தனர்.

 

இந்த நிலையில், பிரிட்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனிடம் தொடர் வலியுறுத்தல்களை செய்து வந்தது மத்திய உள்துறை அமைச்சகம். மேலும், இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்கிற வழக்கையும் தொடுத்தது மத்திய அரசு.

 

லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை அண்மையில் வழங்கியது நீதிமன்றம். இதனால், எந்த நேரத்திலும் அவர் நாடு கடத்தப்படுவார் என்கிற சூழல் இருந்தது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவு மீது எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது பிரிட்டன் அரசின் மத்திய உள்துறை அமைச்சகம். இந்த கால தாமதம் குறித்து பிரிட்டன் அரசுக்கும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது இந்தியா.

 

இந்த நிலையில், இந்த மாதம் இந்தியாவுக்கு வரவிருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். அவரது இந்தியப் பயணம் உறுதி செய்யப்பட்டிருப்பதால், நீரவ் மோடி தொடர்பான பிரச்சனையில் இந்தியாவின் வலியுறுத்தல்களைக் கவனத்தில் எடுத்திருக்கிறது பிரிட்டன் அரசு. இதனையடுத்து, நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதித்து அது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது பிரிட்டன் உள்துறை அமைச்சகம். 14 ஆயிரம் கோடி மோசடி மன்னனான நீரவ் மோடி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.