Skip to main content

குளிர்கால கூட்டத்தொடர்: நாளை காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்தவிருக்கும் எம்.பிக்கள்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

parliament

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கிய நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன் மூலமாக அவையின் மாண்பைக் குலைத்தது ஆகியவற்றுக்காக காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், இதுதொடர்பாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் முறையிட முடிவு செய்தனர். இதற்கிடையே நாடாளுமன்றம் கூடிய நிலையில், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மக்களவையிலிருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

 

இதற்கிடையே மாநிலங்களவை கூடியதும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெறுமாறு சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் வெங்கையா நாயுடு இடைநீக்கத்தை திரும்பப் பெற மறுப்பு தெரிவிக்கவே, மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்.பிக்கள், நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்தநிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதவுள்ளனர். மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நாளை நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.

 

இதற்கிடையே திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, இடைநீக்கம் செய்யப்பட்ட தங்களது எம்.பிக்கள் இருவரும், நாளை முதல் டிசம்பர் 23ஆம் தேதிவரை, காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை காந்தி சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவர் என அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்