நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக கட்சி தமிழகத்தில் ஒரு மக்களவை தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. அந்த தொகுதியை தமிழக துணை முதல்வரின் மகனும், அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடு முழுவதும் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கும் எம்.பிக்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 04.30 சந்திக்கிறார்.
![OPS](http://image.nakkheeran.in/cdn/farfuture/akJtBPPvlYmrvlQT9c1xgzXzlZMkkadEPngsJ6uTp38/1559203293/sites/default/files/inline-images/ops-son-ravindranath-kumar-nomination-..............jpg)
அதிமுக சார்பில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாருக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ரவீந்திரநாத் குமார் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார் இடம் பெறுவது உறுதியாகியுள்ளதாக டெல்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சரவையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக இடம் பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது