Skip to main content

அவருக்கு படுக்கை கொடுங்கள்; இல்லையென்றால் ஊசிபோட்டு கொன்றுவிடுங்கள் - தந்தைக்காக கதறிய மகன்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

sagar kishor

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி ஒருலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இதனால் மஹாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், கரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க படுக்கை வசதியில்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு வெளியேயே சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்களில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

 

இவ்வாறு சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒருவரின் மகன், ‘படுக்கையைத் தாருங்கள் அல்லது தந்தையைக் கொன்றுவிடுங்கள்’ என கதறிய நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் கிஷோர் நஹர்ஷெடிவர் என்பவரின் தந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. சாகர் கிஷோர், தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றுள்ளார். ஆனால் பல மருத்துவமனைகளுக்குச் சென்றும், படுக்கை வசதி இல்லாததால் அவரது தந்தைக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர், தந்தையை தெலங்கானாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கும் மருத்துவமனைகளில் இடமில்லை.

 

இதனையடுத்து அவர், தனது தந்தையை அழைத்துக்கொண்டு மஹாராஷ்ட்ராவிற்கே திரும்பியுள்ளார். அப்போதும் மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. 24 மணி நேரத்திற்குள் இரண்டு மாநிலங்கள் சுற்றியும் அவரது தந்தைக்கு மருத்துவமனையில் அனுமதி கிடைக்காத நிலையில், ஆம்புலன்ஸில் அவரது தந்தைக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த ஆக்சிஜன் அளவும் குறைந்துகொண்டே வந்துள்ளது.

 

இந்தநிலையில், மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த அவரிடம் ஊடகம் ஒன்று பேசியுள்ளது. அப்போது அவர் "அவருக்குப் படுக்கை ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள் அல்லது ஊசி போட்டுக் கொன்றுவிடுங்கள். என்னால் அவரை இந்த நிலைமையில் வீட்டுக்கு அழைத்துச் செல்ல இயலாது. உங்களிடம் படுக்கைகளும் இல்லை" என தெரிவித்தார். அவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருவதோடு, பலரையும் உலுக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்