நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமான இன்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி வெள்ளையாக இருக்கிறார் என்று கூறி அவருக்கு வாக்கு கேட்கின்றனர் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "மோடியை பாருங்கள் கம்பீரமாக இருக்கிறார். அவரது முகத்தைப் பாருங்கள் வெள்ளையாக இருக்கிறார் என சொல்லி வாக்கு கேட்கிறார்கள். மோடி தினமும் காலையும் மாலையும் குளித்து நன்றாக ‘மேக் அப்’ போட்டுக் கொள்கிறார். அவ்வப்போது பவுடர் பூசிக்கொள்கிறார். போதாக்குறைக்கு ‘மேக் அப்’ ஆர்ட்டிஸ்ட் வைத்து வேக்ஸிங் செய்து, க்ரீம் பூசிக் கொள்கிறார். அதனால் அவர் முகம் எப்போதும் பளிச்சென வெள்ளையாக இருக்கிறது. இதைப் பார்த்து ஊடகங்கள் அவருக்கு பின்னால் ‘மோடி மோடி’ என ஓடுகின்றன. ஆனால் நான் இன்று காலை குளித்தால், மீண்டும் மறுநாள் காலைதான் குளிக்கிறேன். அதனால் என் முகம் சோர்வாக இருக்கும். எனவே ஊடகங்கள் என்னைத் தேடி வருவதில்லை" என கூறியுள்ளார்.