Skip to main content

“ஆளுநர் விரும்பும் மோதல்களை உருவாக்க முடியாது” - கேரளா முதல்வர் பினராயி விஜயன்

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Kerala Chief Minister Pinarayi Vijayan crictized kerala governor arif khan

சமீபத்தில், கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கேரள ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்த சூழலில், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளாகவும், 5 மசோதாக்கள் 1 ஆண்டாகவும் நிலுவையில் உள்ளன என்று கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. 

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் அமைப்பான எஸ்.எஃப்.ஐ, கேரள ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தி ஆளுநர் ஆரிஃப் கான் வந்த காரை முற்றுகையிட்டனர். அப்போது கோபம் அடைந்த ஆளுநர் ஆரிஃப் கான், காரில் இருந்து கீழே இறங்கி ஆவேசமாகப் பேசியிருந்தார். மேலும் அவர், கேரளா முதல்வர் என்னை தாக்க சதி செய்ய ஆட்களை அனுப்பியுள்ளார் என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் அதற்காக வேலை செய்ய வேண்டும்; சங்பரிவார்களுக்காக அல்ல என்று கூறி அம்மாநிலத்தில் உள்ள அரசு சமஸ்கிருத கல்லூரிக்கு வெளியே பேனர் வைத்து கடந்த 18 ஆம் தேதி போராட்டம் நடத்தினர். அதேபோல், ஆளுநர் தங்கியிருந்த பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகை அருகிலும் பேனர் வைத்து போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து பேசிய கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், “முதலமைச்சர் இங்கு தங்கியிருந்தால், போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற பேனர் வைத்திருக்க முடியுமா?

கேரளா போலீஸ் இந்தியாவில் தலைசிறந்ததாகும். ஆனால், கேரளா முதல்வர் பினராயி விஜயன் இந்த சிறப்புமிக்க போலீஸ் துறையை களங்கப்படுத்திவிட்டார். அவருடைய உத்தரவுக்கு அடிபணிந்துதான் போலீஸ் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மாணவர்கள் அமைப்பினர் என்னை காயப்படுத்தினால், இங்கே வாருங்கள். அவர்கள் ஏன் இங்கு வரவில்லை? ஏனென்றால், அவர்கள் மாணவர்கள் அல்ல. அனைத்து மாணவர்களும் எஸ்.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களா என்பதை நாம் பார்க்க வேண்டும். வேறு எந்த மாணவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று பேசியிருந்தார். 

இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று (21-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க முயற்சிக்கிறார். அவரது வலையில், இம்மாநில மாணவர்கள் விழாமல் கட்டுப்பாட்டோடு இருக்கிறார்கள். மாணவர் அமைப்புகளுக்கு எதிராக ஆளுநர் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியுள்ளார். ஆனால் மாணவர்கள், அவரைப் போல் தங்களது தரத்தை தாழ்த்திக் கொள்ளாமல் அமைதியாக இருக்கின்றனர். இந்த அமைதியான மாநிலத்தில் ஆளுநர் விரும்பும் அளவிற்கான பிரச்சனைகளையும், மோதல்களையும் உருவாக்க முடியாது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்