மீண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சரிவடையச் செய்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை!
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டின் மொத்த உற்பத்தி சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நாட்டிலுள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுகளின் மதிப்பு செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்த நடவடிக்கையால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என எச்சரித்தார். ஏற்கனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1%-ஆக வீழ்ச்சியடைந்தது.
தற்போது 2017-ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7%-ஆக குறைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய தேக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நாட்டில் உற்பத்தித்துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளதாகவும், அதன் தாக்கமே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீழ்ச்சி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ச.ப.மதிவாணன்