Skip to main content

"நேற்று நீ பிழைத்துவிட்டாய்" - கவுதம் கம்பீருக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

GAMBHIR

 

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார். 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக கிழக்கு டெல்லி தொகுதியில் நின்று வெற்றிபெற்ற அவர், அவ்வப்போது பரபரப்பான அரசியல் கருத்துகளை வெளியிட்டுவருகிறார்.

 

இந்தநிலையில், நேற்று முன்தினம் (23.11.2021) இரவு கவுதம் கம்பீருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இ-மெயில் வழியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர் என்ற பெயரில் வந்த அந்தக் கொலை மிரட்டலையடுத்து கம்பீர் வீட்டுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், இந்த மிரட்டல் குறித்து டெல்லி காவல்துறை விசாரித்துவருகிறது.

 

இந்தநிலையில், நேற்று இரண்டாவது முறையாக கம்பீருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர் என்ற பெயரில் கம்பீருக்கு மீண்டும் வந்துள்ள இ-மெயிலில், "உன்னைக் கொல்ல நினைத்தோம்... ஆனால் நேற்று நீ பிழைத்துவிட்டாய். உன் குடும்பத்தின் வாழ்வை நீ விரும்பினால், அரசியலில் இருந்தும் காஷ்மீர் பிரச்சனையிலிருந்தும் விலகி இரு" என கூறப்பட்டுள்ளதுடன், கம்பீரின் வீட்டிற்கு வெளியே எடுக்கப்பட்ட வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து டெல்லி காவல்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்