Skip to main content

மீண்டும் கோடிக்கணக்கில் கடன் மோசடி.... தப்பியோடிய மூன்று தொழிலதிபர்கள்...

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

basmati rice company directors escaped from india

 

 

ராம்தேவ் இன்டர்நேஷனல் எனும் நிறுவனத்தின் 3 இயக்குநர்கள் வங்கியில் ரூ.411 கோடி கடன் பெற்று, திரும்பச் செலுத்தாமல் வெளிநாட்டிற்குத் தப்பியுள்ளதாக எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் சிபிஐ யிடம் புகாரளித்துள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அளித்த புகாரில், ராம்தேவ் இன்டர்நேஷனல் எனும் நிறுவனத்தின் 3 இயக்குநர்களான நரேஷ் குமார், சுரேஷ் குமார், சங்கீதா ஆகியோர் பல்வேறு வங்கிகளில் ரூ.411 கோடி கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்து வந்த இந்நிறுவனம், இதற்காக எஸ்பிஐ வங்கியில் ரூ.173 கோடி ரூபாயும், கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நிறுவனம் வங்கி ஆகிய வங்கிகளில் மொத்தம் ரூ.411 கோடி கடன் பெற்றிருந்தது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 11 அரிசி ஆலைகள் இயங்கிவந்த சூழலில், சவுதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளிலும் இந்நிறுவன அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. 

இந்த சூழலில் அந்நிறுவனம் கடன் தவணையைக் காட்டாமல் இழுத்தடித்து வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2016, ஜனவரி 17-ம் தேதி அந்தக் கடனை என்பிஏ வாக எஸ்பிஐ அறிவித்தது. பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் கடன் கொடுத்த வங்கிகள் அனைத்தும் கூட்டாகச் சேர்ந்து ஹரியானாவில் உள்ள ராம்தேவ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை ஆய்வு செய்தன.

ஆனால், வங்கிகள் ஆய்வு செய்வதற்கு முன்பே தொழிற்சாலையில் உள்ள எந்திரங்கள் அனைத்தையும் பலருக்கும் விற்பனை செய்து பணத்தைச் சுருட்டியுள்ளனர் அதன் இயக்குநர்கள் மூவரும். இதனையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து 2020, பிப்ரவரி 25-ம் தேதி எஸ்பிஐ வங்கி சார்பில் சிபிஐ அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நினையில் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தற்போது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்