கேரள மாநிலத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். இவர்களில் யாரும் விருப்ப ஓய்வு அறிவிக்கவில்லை. எல்லாருமே ஓய்வு வயதை எட்டியதால் மட்டுமே ஓய்வு பெறுகின்றனர். இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவு மிகப்பெரிய அதிசயமாக இது பார்க்கப்படுகிறது. இதில் அரசு அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என பல துறையினர் அடங்குவர்.
![5000 government employees resigned in kerala](http://image.nakkheeran.in/cdn/farfuture/q8LLckO4LAX2FAcoPPO0ZwZtXjM0KK2UnfwslvDf1nU/1559380494/sites/default/files/inline-images/gvt.jpg)
இதற்கான காரணத்தை ஆராயும் போது, இதில் நேற்று ஓய்வு பெற்ற பலரும் 1980களி்ல் பணிக்கு சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்காது என்பதால் பள்ளி சேர்க்கை தினத்தை மையமாக கொண்டு மே 31-ம் தேதியை பிறந்த தினமாக கணக்கிட்டுள்ளனர். அவர்கள் பிறந்த ஆண்டுகள் மட்டுமே மாறியுள்ளது. இதனையடுத்து வெவ்வேறு துறையில் உள்ளவர்கள், வெவ்வேறு வயதில் ஓய்வு பெறுவதால் இவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஓய்வு பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. நேற்று ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வு பலன்களாக 1,600 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.