Skip to main content

மடியில் கனம் இருப்பதால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை அ.தி.மு.க.வால் தடுக்க இயவில்லை: திருநாவுக்கரசர்

Published on 23/03/2018 | Edited on 23/03/2018

 

Cauvery management board



காவேரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை பெற்றிருக்கிற அ.தி.மு.க. அத்தகைய அழுத்தத்தை தர, துணிவற்ற நிலையில் இருக்கிறது. மடியில் கனம் இருப்பதால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை அ.தி.மு.க.வால் தடுக்க இயவில்லை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

காவேரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆறு வார காலத்திற்குள் நதிநீர் பங்கீடு சட்டப் பிரிவு 6ஏ-யின்படி செயல்திட்டம் (ஸ்கீம்) உருவாக்கப்பட வேண்டுமென்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின்படி ஏப்ரல் 1 ஆம் தேதியோடு ஆறுவார காலம் முடிவடைகிறது. இன்னும் ஒரு வார காலமே எஞ்சியிருக்கிறது. ஆனால் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் ஆகியோர் கூற்றின்படி ஆறுவார காலத்திற்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என்று கூறிவருகிறார்கள். இதற்கு நான்கு மாநில அரசுகளோடு கலந்து பேசி செயல்திட்டத்தை உருவாக்க வேண்டுமென்று கூறுவது இல்லாத ஊருக்கு வழிதேடுகிற முயற்சியாகும். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் ‘ஸ்கீம்” என்று இருக்கிறதே தவிர, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று குறிப்பிடப்படவில்லை என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.

 

ops-eps600.jpg


2007 இல் வெளிவந்த நடுவர்மன்ற தீர்ப்பின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கான நீர் பங்கீட்டு அளவை 14.25 டி.எம்.சி. குறைத்ததே தவிர, மற்றவை அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில் காவேரி மேலாண்மை வாரியம், காவேரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டுமென்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை மூடி மறைத்துவிட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஸ்கீம் என்று தான் கூறப்பட்டிருக்கிறது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று கூறவில்லை என்று திரிபு வாதம் பேசுவது மத்திய பா.ஜ.க. அரசு, தமிழகத்திற்கு செய்கிற மிகப்பெரிய துரோகமாகும். ஏற்கனவே 2016 இல் உச்சநீதிமன்றத்திடம் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று உறுதி கூறிவிட்டு இறுதியாக மத்திய பா.ஜ.க. அரசின் தலைமை வழக்கறிஞர் அதிலிருந்து பின்வாங்கியதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, காவேரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பு ஒரு பரிந்துரையே தவிர, அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றுகிற பொறுப்பு மத்திய அரசுக்கு இல்லை என்று கூறியதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆக, தொடக்கத்திலிருந்தே காவேரி நடுவர்மன்ற தீர்ப்பையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் செயல்படுத்துவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தயாராக இல்லை என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. 
 

காவேரி பிரச்சினையைப் பொறுத்தவரை அரசியல் ஆதாய உள்நோக்கத்தோடு நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலமாக 25 ஆண்டுகாலமாக நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் நிலைநாட்டப்பட்ட தமிழகத்தின் உரிமையை பறிக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. 

காவேரி பிரச்சினையைப் பொறுத்தவரையில் காவேரி நடுவர்மன்றம் அமைப்பு, இடைக்கால தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டது, 2007 இல் இறுதி தீர்ப்பு, இதை மத்திய அரசிதழில் வெளியிட்டது என அனைத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாகவே தமிழகம் தமது உரிமைகளை நிலைநாட்டியிருக்கிறது. இத்தகைய நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்பு தமிழகம் காவேரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை தொடர்ந்து பறித்து துரோகம் செய்து வருகிற மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. 

 

Thirunavukarasar


 

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைககளை காப்பாற்றுகிற வகையில் எஞ்சியிருக்கிற ஒருவார காலத்திற்குள் மத்திய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்டி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆறுவார காலக்கெடு முடிந்து ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் மத்திய பா.ஜ.க. அரசு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறினால் தமிழகம் தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தும். காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தத்தை தராமல் நாடாளுமன்றத்திற்கு வெளியே பெயரளவில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கண்துடைப்பு நாடகத்தை அ.தி.மு.க. நடத்தி வருகிறது. உண்மையிலேயே மத்திய அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க அ.தி.மு.க. விரும்பியிருந்தால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதென முடிவெடுத்திருக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை பெற்றிருக்கிற அ.தி.மு.க. அத்தகைய அழுத்தத்தை தர, துணிவற்ற நிலையில் இருக்கிறது. மடியில் கனம் இருப்பதால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை அ.தி.மு.க.வால் தடுக்க இயவில்லை.
 

எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், இதில் அ.தி.மு.க.வின் மெத்தனப் போக்கை கண்டித்தும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகிற முயற்சியில் தமிழக காங்கிரஸ் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பழனிசாமிக்கு தேவை கமிஷன் தான் ! கமிஷன் கிடைத்தால் என்னவேணாலும் செய்வார் முதல்வர் ! 

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

திருச்சி மத்திய மண்டலத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறவைத்த டெல்டா மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் திருச்சியில் கே.என்.நேரு ஏற்பாட்டில், உழவர் சந்தையில் நடைபெற்றது.
 

stalin


இந்த நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், தஞ்சை எம்.பி. பழனிமாணிக்கம், கரூர் எம்.பி. ஜோதிமணி, நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், பெரம்பலூர் எம்.பி. ஐஜேகே பாரிவேந்தர், இவர்களோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திருவாரூர் பூண்டிகலைவாணன், அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி, தஞ்சை நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து மகிழ்ந்தார். இந்த கூட்டத்தில் காதர்மொய்தீன், ஐ.பெரியசாமி, உதயநிதிஸ்டாலின், சபரீசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சட்டமன்றத்திலும், தேர்தலிலும் பிரச்சாரத்திலும் தவறாமல் பங்கேற்றவர் அன்பில் தர்மலிங்கம் என்றார். அண்ணாவுக்கும், பெரியாருக்கும் ஏற்பட்ட பிரிவில் கசப்பை மறந்து நட்பு பாராட்டியவர் எனவும் குறிப்பிட்டார். காங்கிரஸ் அறிவித்த வேட்பாளரை எதிர்த்து பிரச்சாரம் செய்யவந்த பெரியாரிடம் ஆசி பெற சென்றவர் எனவும் குறிப்பிட்டார். மேலும், கலைஞர் சமாதியை அண்ணா சமாதிக்கு அருகில் அமைக்க எதிர்ப்பு எழுந்த போது போராடி வென்றதாக குறிப்பிட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் உரை:

கலைஞர் இல்லாமல் கொண்டாடும் கலைஞரின் முதல் பிறந்தநாள். தேனியில் அதிமுக கோடி, கோடியாக பணம் கொட்டி வெற்றி பெற்றிருக்கிறார்கள் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இப்போது நாடாளுமன்றத்தில் வெற்றியை போன்று வெற்றிபெற வேண்டும் சூளுரை ஏற்க வேண்டும். ஐந்து முறை ஆட்சி அமைத்த கலைஞரின் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த, கலைஞரின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றார். 
நானே விவசாயி என்கிறார் முதல்வர். ஆனால் அவரே விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார். அவருக்கு தேவை எல்லாம் கமிஷன்தான். 
 

stalin


தமிழக அதிமுக அரசு இந்த வெற்றியை கொச்சைப்படுத்துகிறது. அப்போது மோடி வெற்றி பெற்றது பொய் பிரச்சாரமா? 37 எம்பிக்களை வைத்து என்ன செய்வோம் என்பது நாடாளுமன்றம் கூடும்போது தெரியும்.. அதிமுக ஜடம் எம்பிக்கள்போல் திமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள். 

பெரியார் வழியில் போராடுவார்கள். மும்மொழி கொள்கையை திரும்ப பெற வைத்தோமா இல்லையா? காவிரி தண்ணீர் கேட்டால் மேகேதாது பற்றி பேசுகிறீர்களே. அது காவிரி ஆணையமா, கர்நாடகா ஆணையமா? காவிரி தண்ணீர் 8 வருடமாக மேட்டூர் அணை திறப்பு இல்லை. எடப்பாடிக்கு இது பற்றி கவலை உண்டா? கர்நாடக முதல்வரோடு பேசினாரா? அதிகாரிகளை அங்கே அனுப்பினாரா? எட்டு வழிச்சாலையில் காட்டும் அவசரத்தை ஏன் இதில் காட்டவில்லை? எட்டு வழி சாலை வந்தால்தான் மூவாயிரம் கோடி வரும். பணத்தை தவிர எந்தவித கொள்கையுமற்ற சர்வாதிகார எடுபிடி ஆட்சி நடக்கிறது.. எட்டுவழி சாலையை மக்களை சமாதானப்படுத்தி கொண்டு வந்தே தீருவேன் என்பதே விவசாயியான எடப்பாடியின் நோக்கம்.

மேலும் பேரிழப்புக்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் நடத்துகிற மனிதச்சங்கிலிக்கு திமுக ஆதரவு என தெரிவித்தார். கடந்த ஆண்டு இரண்டு பேரை பலி கொடுத்திருக்கிறோம். இந்த முறை மூன்று பேரை பலி கொடுத்திருக்கிறோம். இந்த தற்கொலைக்கு காரணமே மத்திய, மாநில அரசுகள்தான், சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு மரண அடியை அதிமுக அரசுக்கு புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

 

Next Story

அதுதான் தனது வாழ்நாள் லட்சியம் என்றால் அவர் அப்போதே ஆகியிருப்பார்... -திருநாவுக்கரசர்

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

இன்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரும், காங்கிரஸின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் கிண்டியிலுள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், 

thirunavukarasar



ராகுல்காந்தி மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ராகுல்காந்திதான் தலைவராக நீடிக்க வேண்டும். இதுதான் நாடு முழுவதும் இருக்கும் காங்கிரஸின் கோடிக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நாட்டு மக்களின் விருப்பம்.

ஒரு தேர்தலில் ஏற்படும் வெற்றியோ, தோல்வியோ ஒரு தலைவரின் செல்வாக்கையோ, எதிர்காலத்தையோ தீர்மானித்துவிடாது. இந்தத் தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலுக்கு எப்படி ராகுல்காந்தியை மட்டும் பொறுப்பாக்க முடியும்? நாடு முழுவதும் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மாற்றங்கள் செய்ய வேண்டும் என ராகுல்காந்தி விரும்புகிறார். அதற்கான அதிகாரத்தை செயற்குழு அவருக்கு கொடுத்திருக்கிறது.

அவருக்கு வயதிருக்கிறது. மன்மோகன் சிங் இருக்கும்போது அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பே அவர் பிரதமராக வந்திருக்கலாம். மன்மோகன்சிங்கும் பிரதமர் பதவியை தருவதற்கு தயாராக இருந்தார். பிரதமர் ஆவதுதான் தனது வாழ்க்கை லட்சியம் என அவர் நினைத்திருந்தால் அவர் எப்போதோ பிரதமராகியிருப்பார்.

இந்த ஐந்தாண்டுகள் வேகமாக சென்றுவிடும். அடுத்த பிரதமர் நிச்சயமாக ராகுல்காந்திதான். நாங்கள் அவருக்கு பக்கபலமாக இருப்போம். அவருக்காகவும், கட்சியை பலப்படுத்தவும் எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.